பெர்த் டெஸ்ட் போட்டியில் இருந்து அஷ்வின், ரோகித் சர்மா நீக்கம்


பெர்த் டெஸ்ட் போட்டியில் இருந்து அஷ்வின், ரோகித் சர்மா நீக்கம்
x
தினத்தந்தி 13 Dec 2018 11:53 AM GMT (Updated: 13 Dec 2018 11:53 AM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து அஷ்வின், ரோகித் சர்மா ஆகியோர் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளனர்.

பெர்த்,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

ஆஸ்திரேலிய டெஸ்ட் பயணத்தை முதல்முறையாக வெற்றியுடன் தொடங்கி இருக்கும் இந்திய அணி இப்போது அடுத்த போட்டிக்கு தயாராகி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

பெர்த்தில் வழக்கமாக ‘வாகா’ மைதானத்தில் தான் டெஸ்ட் போட்டி நடத்தப்படும். இந்த முறை அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள 60 ஆயிரம் இருக்கைகள் கொண்ட ஆப்டஸ் ஸ்டேடியத்தில் நடக்கிறது. ஆப்டஸ் ஸ்டேடியத்தில் இதுவரை இரண்டு ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன. இரண்டிலும் ஆஸ்திரேலிய அணி (இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா) தோல்வியை தழுவியது. டெஸ்ட் போட்டி இங்கு நடக்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. 13 வீரர்கள் கொண்ட இந்த பட்டியலில் அஸ்வின், ரோகித் சர்மா ஆகியோர் இடம்பெறவில்லை. காயம் காரணமாக அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி வெளியிட்டுள்ள 13 வீரர்கள் கொண்ட பட்டியல்: 

 விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், கே.எல்,ராகுல், புஜாரா, ரகானே (துணை கேப்டன்), ஹனுமா விகாரி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ். 

ஆஸ்திரேலிய அணி ஆடும் லெவனையே அறிவித்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற அணியில் எந்த மாற்றமும் அந்த அணியில் செய்யப்படவில்லை. 

Next Story