கடைசி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஒரு நாள் தொடரை கைப்பற்றியது வங்காளதேசம்


கடைசி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஒரு நாள் தொடரை கைப்பற்றியது வங்காளதேசம்
x
தினத்தந்தி 14 Dec 2018 9:45 PM GMT (Updated: 14 Dec 2018 7:22 PM GMT)

கடைசி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஒரு நாள் தொடரை வங்காளதேச அணி கைப்பற்றியது.

சியல்ஹெட்,

வங்காளதேசம்-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சியல்ஹெட்டில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 198 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து 2-வது சதத்தை அடித்த தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் 108 ரன்களுடன் (131 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தார். சுழற்பந்து வீச்சாளர் மெஹதி ஹசன் மிராஸ் 4 விக்கெட்டுகளும், ஷகிப் அல்-ஹசன், மோர்தசா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். கடைசி ஓவரில் ஹெல்மெட்டில் பந்து தாக்கியதால் அதன் பிறகு பீல்டிங் செய்ய ஹோப் வரவில்லை.

எளிய இலக்கை வங்காளதேச அணி, தமிம் இக்பால் (81 ரன், 9 பவுண்டரி), சவும்யா சர்கார் (80 ரன், 5 பவுண்டரி, 5 சிக்சர்) ஆகியோரின் அதிரடியான அரைசதத்தின் உதவியுடன் 38.3 ஓவர்களில் எட்டிப்பிடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வங்காளதேச அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது ஆட்டம் இதே மைதானத்தில் நாளை மறுதினம் நடக்கிறது.



Next Story