வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் வெஸ்ட்இண்டீஸ் அணி அபார வெற்றி


வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் வெஸ்ட்இண்டீஸ் அணி அபார வெற்றி
x
தினத்தந்தி 17 Dec 2018 10:59 PM GMT (Updated: 17 Dec 2018 10:59 PM GMT)

வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் வெஸ்ட்இண்டீஸ் அணி அபார வெற்றிபெற்றது. அந்த அணியில் ஷாய் ஹோப் 16 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.

சியல்ஹெட்,

வங்காளதேசம்-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சியல்ஹெட்டில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி, வெஸ்ட்இண்டீஸ் வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19 ஓவர்களில் 129 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் ஷகிப் அல்-ஹசன் 61 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். வெஸ்ட்இண்டீஸ் அணி தரப்பில் ஷெல்டன் காட்ரெல் 4 விக்கெட்டும், கீமோ பால் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 10.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 55 ரன்கள் (23 பந்து, 3 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழந்தார். 25 வயது விக்கெட் கீப்பரான ஷாய் ஹோப் 16 பந்துகளில் (3 பவுண்டரி, 6 சிக்சர்) அரை சதத்தை எட்டினார். இதன் மூலம் அவர் சர்வதேச 20 ஓவர் போட்டியில் அதிவேகமாக (குறைந்த பந்துகளில்) அரை சதம் அடித்த 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு இந்திய வீரர் யுவராஜ் சிங் (2007-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக) 12 பந்துகளிலும், நியூசிலாந்து வீரர் காலின் முன்ரோ (2016-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக) 14 பந்துகளிலும் அரை சதம் அடித்து அதிவேகமாக அரை சதம் அடித்தவர்கள் வரிசையில் முறையே முதல் 2 இடத்தில் உள்ளனர்.


Next Story