மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யாவை சேர்க்க வேண்டும் முன்னாள் வீரர் ஹஸ்சி சொல்கிறார்


மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யாவை சேர்க்க வேண்டும் முன்னாள் வீரர் ஹஸ்சி சொல்கிறார்
x
தினத்தந்தி 21 Dec 2018 10:30 PM GMT (Updated: 21 Dec 2018 8:55 PM GMT)

‘மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்கான இந்திய ஆடும் லெவன் அணியில் ஹர்திக் பாண்ட்யாவை சேர்க்க வேண்டும்’ என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்சி தெரிவித்துள்ளார்.

மெல்போர்ன், 

‘மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்கான இந்திய ஆடும் லெவன் அணியில் ஹர்திக் பாண்ட்யாவை சேர்க்க வேண்டும்’ என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்சி தெரிவித்துள்ளார்.

ஹஸ்சி பேட்டி

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. பெர்த்தில் நடந்த 2–வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் போட்டி தொடர் 1–1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 26–ந் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இந்த போட்டி குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மைக் ஹஸ்சி அளித்த பேட்டியில் கூறியதாவது:–

பெர்த் ஆடுகளத்தின் தன்மை மிகவும் தனித்துவம் வாய்ந்தது. அதில் இருந்து மெல்போர்ன் ஆடுகளத்தின் தன்மை முற்றிலும் மாறுபட்டதாகும். இந்த போட்டி தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அருமையாக பந்து வீசி வருகிறார்கள். வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் அடிலெய்டு, பெர்த் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் நிறைய ஓவர்கள் வீசினார்கள்.

ஹர்திக் பாண்ட்யாவை சேர்க்க வேண்டும்

ஹர்திக் பாண்ட்யா கிட்டத்தட்ட மிட்செல் மார்ஷ் போன்றவர். அவர் நல்ல பார்மில் இருந்தால் அணிக்கு கூடுதல் பந்து வீச்சு வாய்ப்பாக அமைவார். எனவே அவரை மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஆடும் லெவன் அணியில் சேர்ப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும். அணியில் பவுலிங் ஆல்–ரவுண்டர் இடம் பெறுவது பயனுள்ளதாக இருக்கும்.

ஆடுகளத்தின் தன்மையை பார்க்கையில் இந்திய அணி 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியதை குறை சொல்ல முடியாது. கடந்த டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சு எடுபட்டது. முதல் நாள் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தது. இதனால் டாஸ் முக்கிய பங்கு வகித்ததாக நான் நினைக்கிறேன். முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி கவுரவமான ஸ்கோர் எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் குறைவாக ரன் எடுத்ததால் ஆட்டம் ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக திரும்பியது. தரமான இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை இழக்க நேர்ந்தது அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. நாதன் லயன் தரமான சுழற்பந்து வீச்சாளர். அவர் ஒரு முனையில் சிறந்த தாக்குதலை தொடுத்ததால், வேகப்பந்து வீச்சாளர்களை கேப்டன் டிம் பெய்ன் சுழற்சி முறையில் பயன்படுத்த முடிந்தது.

தொடக்க ஆட்டம் மோசம்

நெருக்கடிக்கு மத்தியிலும் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக ரன் சேர்த்து வருகிறார்கள். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் மோசமான செயல்பாடு தொடருகிறது. விராட்கோலி உலகின் சிறந்த வீரர். அவரை இந்திய அணி நம்பி இருப்பதை தவறு என்று சொல்ல முடியாது. ஆஸ்திரேலிய அணியை பொறுத்தமட்டில் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆடினால் அவர்களை தான் அதிகம் நம்பி இருக்கிறது. அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் புஜாரா அபாரமாக செயல்பட்டார். பெர்த் டெஸ்ட் போட்டியில் ரஹானே சிறப்பாக விளையாடினார். கடந்த போட்டியில் இந்திய அணியின் பின்வரிசை வீரர்கள் சரியாக பேட்டிங் செய்யாதது அணிக்கு பாதிப்பாக அமைந்தது.

மேற்கண்டவாறு மைக் ஹஸ்சி கூறினார்.


Next Story