‘‘விஹாரியை தொடக்க ஆட்டக்காரராக இறக்கலாம்’’ சஞ்சய் மஞ்சரேக்கர் யோசனை


‘‘விஹாரியை தொடக்க ஆட்டக்காரராக இறக்கலாம்’’ சஞ்சய் மஞ்சரேக்கர் யோசனை
x
தினத்தந்தி 22 Dec 2018 10:30 PM GMT (Updated: 22 Dec 2018 8:43 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3–வது டெஸ்டில் ராகுலை நீக்கிவிட்டு விஹாரியை தொடக்க ஆட்டக்காரராக இறக்கலாம் என்று முன்னாள் வீரர் மஞ்சரேக்கர் யோசனை தெரிவித்துள்ளார்.

மும்பை, 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3–வது டெஸ்டில் ராகுலை நீக்கிவிட்டு விஹாரியை தொடக்க ஆட்டக்காரராக இறக்கலாம் என்று முன்னாள் வீரர் மஞ்சரேக்கர் யோசனை தெரிவித்துள்ளார்.

மஞ்சரேக்கர் கருத்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3–வது டெஸ்ட் போட்டியில் இந்திய லெவன் அணியில் யார்–யார் இடம் பெற வேண்டும் என்பது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் இணையதளம் ஒன்றுக்கு எழுதியுள்ள பகுதியில் கூறியிருப்பதாவது:–

3–வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால், ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வதில் முதலில் சாதுர்யமாக செயல்பட வேண்டும். முந்தைய டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் இன்றி 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இறங்கி தவறிழைத்து விட்டனர். இந்த டெஸ்டில் ஒரு சுழற்பந்து வீச்சாளரை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. அஸ்வின் முழுமையான உடல்தகுதியை எட்டாத நிலையில் அவரை சேர்க்கக் கூடாது. இங்கிலாந்து தொடரின் போது சவுதம்டன் டெஸ்டில் அஸ்வின் உடல்தகுதியுடன் இல்லாமல் அதனால் ஏற்பட்ட பாதிப்பை மறந்து விடக்கூடாது. எனவே இந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளிக்கலாம். அஸ்வினுடன் ஒப்பிடும் போது, விக்கெட் கைப்பற்றுவதில் ஜடேஜா ஒன்றும் சளைத்தவர் அல்ல.

தொடக்க வீரர் லோகேஷ் ராகுல், நம்பிக்கையை இழந்து விட்டார். அவர் முற்றிலும் தடுமாறிக்கொண்டிருக்கிறார். இப்போது அவருக்கு ஓய்வு கொடுப்பது மட்டுமே நல்லது. ராகுலை கழற்றி விடுவதற்காக நாம் வருத்தம் மட்டுமே பட முடியும். அதே சமயம் பிரித்வி ஷா காயமடைந்தது முரளிவிஜய்க்கு அதிர்ஷ்டம். இதனால் அவருக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

மயங்க் அகர்வால்

பெர்த் டெஸ்டின் 2–வது இன்னிங்சில் விஜய் 20 ரன்களுடன் நன்றாக ஆடிக்கொண்டிருப்பது போன்றே தெரிந்தது. சுழற்பந்து வீச்சாளர் லயனின் பந்து வீச்சில் மோசமான ஒரு ஷாட் அடித்து ஆட்டம் இழந்து விட்டார். அதனால் அவரை 3–வது டெஸ்டிலும் தொடரச் செய்யலாம்.

ராகுலை நீக்கினால், விஜயுடன் கைகோர்க்கும் தொடக்க ஆட்டக்காரர் யார் என்பது தான் கேள்வி. மயங்க் அகர்வால் உள்நாட்டில் மலைக்க வைக்கும் அளவுக்கு ரன்கள் குவித்து இருக்கிறார். தற்போது தொடக்க ஆட்டக்காரர்கள் சோடை போன நிலையில், இந்திய அணியில் இடம் பெறுவதற்கு அவர் தகுதியானவர் என்பது எல்லோரும் ஆமோதிக்கும் கருத்து.

ஆனால் கடினமான ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் அதுவும் கூக்கபுரா பந்துகளில் இளம் வீரர் ஒருவரை பயிற்சி ஆட்டம் எதுமின்றி உடனடியாக களம் இறக்குவது சரியாக இருக்குமா? என்பது தான் எனது கேள்வி. இந்திய கிரிக்கெட் வரலாற்றை புரட்டிப்பார்த்தால், தொடக்க ஆட்டக்காரர்கள் யாரும் ஆஸ்திரேலிய மண்ணில் அறிமுக வீரராக அடியெடுத்து வைப்பது அரிது என்பது புலப்படும்.

விஹாரியை...

ஹனுமா விஹாரி தனது முதல் இரண்டு வெளிநாட்டு டெஸ்டுகளிலும் நன்றாகவே ஆடியுள்ளார். ஒவ்வொரு முறையும் அவரது ஆட்டத்தை பார்க்கும் போது, டாப்–3 இடங்களுக்குள் அவர் இறங்குவதற்கு தகுதியானவர் போன்றே தெரிகிறது. நமது அணியில் மிடில் வரிசை பேட்ஸ்மேன்களை தொடக்க வரிசைக்கு அனுப்புவது ஒன்றும் புதிதல்ல. ஷேவாக்கை அதற்கு உதாரணமாக சொல்ல முடியும். அதனால் விஹாரியை தொடக்க வரிசைக்கு முயற்சித்து பார்க்கலாம்.

மயங்க் அகர்வாலை பொறுத்தவரை அங்கு வலை பயிற்சியில் அவருக்கு அதிகமான பந்துகளை வீசி தயார்படுத்திய பிறகு கடைசி டெஸ்ட் போட்டியில் சேர்க்கலாம். இதே போட்டி இந்தியாவில் நடந்திருந்தால் அவரை உடனடியாக களம் இறக்குவதில் பிரச்சினை இருந்திருக்காது.

இவ்வாறு மஞ்சரேக்கர் கூறியுள்ளார்.


Next Story