இலங்கை அணி 104 ரன்னில் சுருண்டது: 15 பந்தில் 6 விக்கெட் வீழ்த்தி அசத்திய டிரென்ட் பவுல்ட்


இலங்கை அணி 104 ரன்னில் சுருண்டது: 15 பந்தில் 6 விக்கெட் வீழ்த்தி அசத்திய டிரென்ட் பவுல்ட்
x
தினத்தந்தி 27 Dec 2018 10:15 PM GMT (Updated: 27 Dec 2018 8:09 PM GMT)

இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நடந்து வருகிறது.

கிறைஸ்ட்சர்ச்,

இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 178 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 88 ரன்கள் எடுத்திருந்த போது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி, நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்டின் பந்து வீச்சில் நிலைகுலைந்தது. எஞ்சிய 6 விக்கெட்டுகளையும் அவர் ஒருவரே கபளகரம் செய்து மிரட்டினார். அதுவும் தனது கடைசி 15 பந்துகளில் 4 ரன் மட்டுமே கொடுத்து இந்த 6 விக்கெட்டுகளையும் சாய்த்தார். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 41 ஓவர்களில் 104 ரன்னில் சுருண்டது. மேத்யூஸ் 33 ரன்களுடன் கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்.

பின்னர் 74 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 79 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் சேர்த்துள்ளது. ஜீத் ராவல் (74 ரன்), டாம் லாதம் (74 ரன், நாட்-அவுட்) அரைசதம் அடித்தனர். கேப்டன் வில்லியம்சன் 48 ரன்களில் கேட்ச் ஆனார். இதுவரை 305 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையை அடைந்துள்ள நியூசிலாந்து அணி இன்று 3-வது நாளில் தொடர்ந்து ஆடும்.

Next Story