ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று இந்தியா வரலாற்று சாதனை


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று இந்தியா வரலாற்று சாதனை
x
தினத்தந்தி 7 Jan 2019 3:46 AM GMT (Updated: 7 Jan 2019 6:08 AM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

சிட்னி,

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்டுக்கு 622 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா  104.5 ஓவர்களில் 300 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆகி ‘பாலோ–ஆன்’ ஆனது. ஸ்டார்க் 29 ரன்களுடன் (55 பந்து, 3 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தார். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். 

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பாலோ–ஆன் வழங்கியதால் 322 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி 2–வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 6 ரன் எடுத்திருந்த போது, மழை மேகம் திரண்டு இருள் சூழ்ந்ததால், போதிய வெளிச்சம் இல்லை என்று கூறி போட்டியை நடுவர் நிறுத்தினார். நீண்ட நேரம் மோசமான வானிலையே நீடித்தது. மாலையில் மழை தூரலும் விழுந்ததால் அத்துடன் 4–வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. நேற்றைய தினம் வெறும் 25.2 ஓவர்கள் மட்டுமே பந்து வீசப்பட்டன.

இந்த நிலையில். 5 ஆம் நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, ஒரு பந்து கூட வீசப்படாமல் 5-ஆம் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்வது இதுதான் முதல் தடவையாகும்.  1947–ம் ஆண்டு இறுதியில் முதல்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு பயணித்த இந்திய அணி அங்கு தனது கனவை 12–வது முயற்சியில், அதாவது 71 ஆண்டுகளுக்கு பிறகு நனவாக்கியுள்ளது.

ஆட்ட நாயகன் விருதும், தொடர் நாயகன் விருதும் இந்திய வீரர் புஜாராவுக்கு வழங்கப்பட்டது. 

Next Story