இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி அபார வெற்றி


இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி அபார வெற்றி
x
தினத்தந்தி 8 Jan 2019 11:00 PM GMT (Updated: 8 Jan 2019 10:19 PM GMT)

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நெல்சன்,

இலங்கை-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நெல்சனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் கப்தில் (2 ரன்), காலின் முன்ரோ (21 ரன்) ஏமாற்றம் அளித்தாலும், மிடில் வரிசை வீரர்களான டெய்லரும், நிகோல்சும் இணைந்து அணியை தூக்கி நிறுத்தினர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்தது.

தனது 20-வது சதம் எட்டிய ராஸ் டெய்லர் 131 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்சருடன் 137 ரன்கள் விளாசி கேட்ச் ஆனார். ஒருநாள் போட்டியில் ராஸ் டெய்லர் தொடர்ச்சியாக 6-வது முறையாக 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். முதலாவது சதம் அடித்த ஹென்றி நிகோல்ஸ் 80 பந்துகளில் 12 பவுண்டரி, 3 சிக்சருடன் 124 ரன்கள் சேர்த்தார். கேப்டன் வில்லியம்சன் தனது பங்குக்கு 55 ரன்கள் எடுத்தார்.

பின்னர் கடின இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி 41.4 ஓவர்களில் 249 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் நியூசிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக திசரா பெரேரா 80 ரன்னும், டிக்வெல்லா 46 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் லோக்கி பெர்குசன் 4 விக்கெட்டும், சோதி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 3 ஆட்டங்கள் இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இவ்விரு அணிகள் இடையிலான ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 11-ந் தேதி ஆக்லாந்தில் நடக்கிறது.

தோல்வி குறித்து இலங்கை அணியின் கேப்டன் மலிங்கா கூறுகையில், ‘3 ஆட்டங்களிலும் கடைசி 15 ஓவர்களில் நாங்கள் சரியாக பந்து வீசவில்லை. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக எங்களது மிடில் வரிசை பேட்டிங்கை வலுப்படுத்த வேண்டியது அவசியமானதாகும். அடுத்த போட்டிக்கு முன்பாக வீரர்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.’ என்றார்.

நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் கூறுகையில், ‘ஒவ்வொரு ஆட்டங்களிலும் நாங்கள் முன்னேற்றம் கண்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ் சதத்தால் நாங்கள் 350 ரன்களை கடந்தோம். வீரர்கள் தங்களது பங்களிப்பை சரியாக அளிப்பதை பார்க்கவே நன்றாக இருக்கிறது. தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிபடுத்துவது முக்கியமானதாகும்’ என்றார்.


Next Story