அம்பத்தி ராயுடுவின் பந்து வீச்சில் சந்தேகம் - ஐ.சி.சி. புகார்


அம்பத்தி ராயுடுவின் பந்து வீச்சில் சந்தேகம் - ஐ.சி.சி. புகார்
x
தினத்தந்தி 13 Jan 2019 10:45 PM GMT (Updated: 13 Jan 2019 9:49 PM GMT)

அம்பத்தி ராயுடுவின் பந்து வீச்சில் சந்தேகம் உள்ளதாக ஐ.சி.சி. புகார் தெரிவித்துள்ளது.

துபாய்,

சிட்னியில் நேற்று முன்தினம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் அம்பத்தி ராயுடு 2 ஓவர்கள் பந்து வீசி 13 ரன்கள் விட்டுக்கொடுத்தார். விக்கெட் எடுக்கவில்லை.

இந்த நிலையில் அவரது பந்து வீச்சு சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்ததாக நடுவர்களின் அறிக்கை அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) புகார் தெரிவித்துள்ளது. அடுத்த 14 நாட்களுக்குள் அம்பத்தி ராயுடு தனது பந்து வீச்சு முறையை சோதனைக்குட்படுத்த வேண்டும். அதன் முடிவு வெளியாகும் வரை அவர் தொடர்ந்து பந்து வீச அனுமதிக்கப்படும்.

பவுலிங் செய்யும் போது, முழங்கை 15 டிகிரி கோணத்திற்கு மேல் வளையக்கூடாது. எனவே சோதனையின் போது அம்பத்தி ராயுடுவின் பந்து வீச்சு விதிமுறைக்கு புறம்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டால், அதை சரி செய்யும் வரை அவர் பந்து வீசுவதற்கு தடை விதிக்கப்படும். 33 வயதான அம்பத்தி ராயுடு பிரதான பேட்ஸ்மேன் என்பதால், இந்த விவகாரம் அவருக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. இதுவரை 46 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ள அவர் 9 ஓவர்கள் மட்டுமே பந்து வீசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story