சர்ச்சையில் சிக்கி நீக்கப்பட்ட பாண்ட்யா, ராகுலுக்கு பதிலாக இந்திய அணியில் விஜய் சங்கர், சுப்மான் கில் சேர்ப்பு


சர்ச்சையில் சிக்கி நீக்கப்பட்ட பாண்ட்யா, ராகுலுக்கு பதிலாக இந்திய அணியில் விஜய் சங்கர், சுப்மான் கில் சேர்ப்பு
x
தினத்தந்தி 13 Jan 2019 11:15 PM GMT (Updated: 13 Jan 2019 10:02 PM GMT)

சர்ச்சையில் சிக்கி நீக்கப்பட்ட பாண்ட்யா, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு பதிலாக இந்திய அணியில் விஜய் சங்கர், சுப்மான் கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி,

டி.வி. நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து இழிவான கருத்துகளை தெரிவித்து சர்ச்சையில் மாட்டிக்கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை மேற்கொள்ள இருக்கிறது. விசாரணை முடியும் வரை இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர்களில் இருந்து கழற்றி விடப்பட்டனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு பதிலாக இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர், பேட்ஸ்மேன் சுப்மான் கில் ஆகியோர் சேர்க்கப்படுவதாக கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சங்கர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய இரண்டு ஒரு நாள் போட்டி மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இடம் பெறுவார். சுப்மான் கில், வருகிற 23-ந்தேதி தொடங்கும் நியூசிலாந்து தொடருக்கான (5 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி) இந்திய அணி யில் மட்டும் இடம் வகிப்பார்.

விஜய் சங்கர், நேற்றிரவு ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டார். 2-வது நாள் போட்டி அடிலெய்டில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அதற்குள் அவர் அணியுடன் இணைந்து கொள்வார்.

தமிழகத்தை சேர்ந்த 27 வயதான விஜய் சங்கர், இந்திய அணிக்காக ஏற்கனவே ஐந்து 20 ஓவர் போட்டிகளில் ஆடியிருக்கிறார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொழும்பில் நடந்த நிதாஹாஸ் முத்தரப்பு 20 ஓவர் தொடரில் வங்காளதேசத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் விஜய் சங்கர் சொதப்பியதை யாரும் மறந்து விட முடியாது. கடைசி கட்டத்தில் அவர் பந்துகளை விரயம் செய்து எரிச்சலூட்டினார். அதிர்ஷ்டவசமாக கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக் சிக்சர் அடித்து கோப்பையை வென்றுத் தந்தார்.

இதனால் விஜய் சங்கர் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். சமூக வலைதளத்தில் ரசிகர்கள் வறுத்தெடுத்தனர். அதன் பிறகு ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் எதிர்பார்த்த அளவுக்கு (டெல்லி டேர்டெவில்ஸ் அணி) ஜொலிக்கவில்லை. கடந்த மாதம் நியூசிலாந்தில் நடந்த இந்திய ‘ஏ’ அணிக்கான ஒரு நாள் தொடரில் விஜய் சங்கர் அசத்தினார். 87, 59, 42 வீதம் ரன்கள் எடுத்ததுடன், அந்த தொடரையும் இந்திய ‘ஏ’ அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இது தான் அவருக்கு மறுபடியும் அணிக்குள் நுழையும் வாய்ப்பை கொடுத்துள்ளது.

விஜய் சங்கர் நேற்று கூறியதாவது:-

முத்தரப்பு 20 ஓவர் தொடர் முடிந்து முதல் இரண்டு நாட்கள் மிகவும் கடினமாகவும், வேதனையாகவும் இருந்தது. ஆனால் அதுவே ஒரு கிரிக்கெட் வீரராக என்னை மேம்படுத்திக்கொள்ளவும், சமூக வலைதளங்களின் நெருக்கடியை சமாளிக்கவும் உதவிகரமாக இருந்தது. அந்த போட்டிக்கு பிறகு தினேஷ் கார்த்திக், ரோகித் சர்மா உள்ளிட்டோர் வந்து, கிரிக்கெட்டில் இது மாதிரி நடப்பது சகஜம் என்று கூறி என்னை தேற்றினர். நானும் அதை மறந்து விட்டு, முதல்தர மற்றும் ஏ அணிக்கான போட்டிகளில் ரன்கள் குவிப்பதில் கவனம் செலுத்தினேன்.

இப்போது நான் மனரீதியாக வலுவுடன் இருக்கிறேன். ஆட்டங்களை வெற்றிகரமாக முடித்து தர முடியும் என்று முழுமையாக நம்புகிறேன். நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிரான தொடர் எனது ஆட்டத்திறனை வளர்த்துக் கொள்ள உதவியதுடன், நிறைய அனுபவங்களை கற்றுத்தந்தது. இந்திய ‘ஏ’ அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், போட்டியை வெற்றியுடன் முடித்து தரும் எனது திறமை மீது நம்பிக்கை வைத்து 5-வது பேட்டிங் வரிசையில் என்னை இறக்கினார். அந்த வரிசை எனது பேட்டிங் ஸ்டைலுக்கு பொருத்தமாக இருந்தது.

இதில் இரண்டு ஆட்டங்கள் நெருக்கமாக இருந்தன. ஒரு ஆட்டத்தில் கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தேன். இன்னொரு ஆட்டத்தில் 300 ரன்கள் மேலான இலக்கை விரட்டிய போது 87 ரன்கள் விளாசியது எனது நம்பிக்கையை அதிகப்படுத்தியது. அணிக்கு என்ன தேவையோ அதை என்னால் செய்ய முடிந்தது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைக்குமா? என்பது குறித்து சிந்தித்து கொண்டிருக்கவில்லை. அது பற்றிய நினைப்புடன் இருந்தால் இயல்பாக ஆட முடியாது. களம் காண எனக்கு வாய்ப்பு கிடைத்தால், அதை சரியாக பயன்படுத்திக்கொள்வது முக்கியம். போட்டிக்கு தயாராக உள்ளேன். இவ்வாறு விஜய் சங்கர் கூறினார்.

19 வயதான சுப்மான் கில், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். இந்த சீசனில் ரஞ்சி கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்காக 10 ஆட்டங்களில் விளையாடி 790 ரன்கள் குவித்தார். இதில் தமிழகத்திற்கு எதிராக 268 ரன்கள் குவித்ததும் அடங்கும். நியூசிலாந்தில் கடந்த ஆண்டு நடந்த ஜூனியர் உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றிய போது, அதில் தொடர்நாயகனாக (5 ஆட்டத்தில் 373 ரன்) சுப்மான் கில் தேர்வு செய்யப்பட்டது நினைவு கூரத்தக்கது.

முதல்முறையாக தேசிய அணிக்கு அழைக்கப்பட்டுள்ள சுப்மான் கில் நிருபர்களிடம் கூறுகையில், ‘நியூசிலாந்து தொடருக்கு தேர்வு செய்யப்பட்டது, எனக்கு மிகப்பெரிய சாதகமான அம்சமாகும். ஏனெனில் நியூசிலாந்தில் நடந்த ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடியுள்ளேன். இப்போது அங்கு ஆடுவதற்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அங்கு ஏற்கனவே விளையாடிய அனுபவம் இருப்பதால் ஆட்டநுணுக்க விஷயத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் களம் காண வாய்ப்பு கிடைத்தால், நெருக்கடியை மட்டும் சமாளிக்க வேண்டி இருக்கும்’ என்றார்.


Next Story