பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி


பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி
x
தினத்தந்தி 14 Jan 2019 10:15 PM GMT (Updated: 14 Jan 2019 7:25 PM GMT)

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

ஜோகன்னஸ்பர்க், 

தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தென்ஆப்பிரிக்கா 262 ரன்களும், பாகிஸ்தான் 185 ரன்களும் எடுத்தன. 77 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 303 ரன்கள் குவித்து ‘ஆல்-அவுட்’ ஆனது. குயின்டான் டி காக் 129 ரன்னும், அம்லா 71 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் 381 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 40 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து இருந்தது. ஆசாத் ஷபிக் 48 ரன்னுடனும், பாபர் அசாம் 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் வேகமாக வீழ்ந்தன. பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 65.4 ஓவர்களில் 273 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் தென்ஆப்பிரிக்க அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஆசாத் ஷபிக் 65 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஷதாப் கான் 47 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் ரபடா, ஆலிவர் தலா 3 விக்கெட்டும், ஸ்டெயின் 2 விக்கெட்டும், பிலாண்டர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். தென்ஆப்பிரிக்க அணி வீரர்கள் குயின்டான் டி காக் ஆட்டநாயகன் விருதையும், ஆலிவர் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை தென்ஆப்பிரிக்க அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந் தேதி போர்ட்எலிசபெத்தில் நடக்கிறது.

Next Story