டோனியை விட அர்ப்பணிப்பு மிக்க வீரர் யாரும் இல்லை - கோலி புகழாரம்


டோனியை விட அர்ப்பணிப்பு மிக்க வீரர் யாரும் இல்லை - கோலி புகழாரம்
x
தினத்தந்தி 18 Jan 2019 11:15 PM GMT (Updated: 18 Jan 2019 8:38 PM GMT)

டோனியை விட அர்ப்பணிப்பு மிக்க வீரர் யாரும் இல்லை என கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

மெல்போர்ன்,

வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘இது பேட்டிங்குக்கு சிறந்த ஆடுகளம் அல்ல. அதனால் நிலைத்து நின்று ஆட வேண்டி இருந்தது. கடைசி கட்டத்தில் நாங்கள் கொஞ்சம் பதற்றம் அடைந்தாலும், டோனி, ஜாதவ் ஜோடியினர் சரியாக என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து அதற்கு ஏற்ப செயல்பட்டனர். டோனியை நினைத்து ஒரு அணியாக மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். அவர் இந்த தொடரில் கணிசமான ரன்கள் எடுத்து இருக்கிறார். எப்போதும் ரன் குவிக்கும் போது, அது பழைய நிலைக்கு திரும்பி, நம்பிக்கையை மீட்டெடுக்க உதவும். டோனி குறித்து வெளியில் நிறைய பேசுகிறார்கள். ஆனால் இந்திய கிரிக்கெட்டுக்கு டோனியை விட அதிக அர்ப்பணிப்பு கொண்ட வீரர் யாரும் கிடையாது என்பதை நாங்கள் அறிவோம். இந்திய அணிக்காக அவர் நிறைய பங்களிப்பு அளித்து இருக்கிறார். மிகவும் புத்திசாலித்தனமான ஒரு கிரிக்கெட் வீரர். அணிக்கு என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அதனால் அவரை, அவரது போக்கிலேயே விட்டுவிட வேண்டும்’ என்றார்.

தொடர்நாயகன் விருது பெற்ற டோனி கூறுகையில், 4-வது பேட்டிங் வரிசையில் நான் உற்சாகமாக அனுபவித்து விளையாடினேன். நாம் எந்த வரிசையில் பேட்டிங் செய்கிறோம் என்பதை விட அணியின் சமச்சீர் தன்மை மாறக்கூடாது. அது தான் முக்கியம். பேட்டிங்கில் நான் எந்த வரிசையிலும் களம் காண தயாராக இருக்கிறேன். மீண்டும் 5 அல்லது 6-வது வரிசை என்றாலும் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன். 14 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடிவிட்ட நிலையில், இப்போது 6-வது வரிசையில் இறங்க மாட்டேன் என்றோ, 4 அல்லது 5-வது வரிசை தான் தேவை என்றோ கூற முடியாது. அணிக்கு எந்த வரிசையில் நான் தேவைப்படுகிறனோ அந்த வரிசையில் இறங்கி விளையாடுவேன்’ என்றார்.


Next Story