‘பிங்க் டே’யில் தென்ஆப்பிரிக்கா முதல் தோல்வி


‘பிங்க் டே’யில் தென்ஆப்பிரிக்கா முதல் தோல்வி
x
தினத்தந்தி 27 Jan 2019 9:30 PM GMT (Updated: 27 Jan 2019 6:29 PM GMT)

தென்ஆப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று நடந்தது.

ஜோகன்னஸ்பர்க், 

தென்ஆப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி ஒரு கட்டத்தில் 2 விக்கெட்டுக்கு 119 ரன்களுடன் (25.5 ஓவர்) நல்ல நிலையில் இருந்தது. கேப்டன் பிளிஸ்சிஸ் (57 ரன்), அம்லா (59 ரன்) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறியதும் தென்ஆப்பிரிக்காவின் விக்கெட்டுகள் கொத்து கொத்தாக சரிந்தன. அந்த அணி 41 ஓவர்களில் 164 ரன்னில் சுருண்டது. வேகப்பந்து வீச்சாளர் உஸ்மான் ஷின்வாரி 4 விக்கெட்டுகளும், ‌ஷகீன் ஷா அப்ரிடி, ‌ஷதப் கான் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த எளிய இலக்கை பாகிஸ்தான் அணி 31.3 ஓவர்களில் எட்டிப்பிடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இமாம் உல்–ஹக் 71 ரன்களும், பஹார் ஜமான் 44 ரன்களும், பாபர் அசாம் 41 ரன்களும் (நாட்–அவுட்) சேர்த்தனர்.

தென்ஆப்பிரிக்க அணி ஒவ்வொரு ஆண்டும் இதே இடத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் நலநிதி திரட்டுவதற்காக ‘பிங்க் டே’ என்ற பெயரில் இளஞ்சிவப்பு நிற சீருடை அணிந்து விளையாடுவது உண்டு. அந்த வகையில் இந்த ஆட்டத்தில் இளஞ்சிவப்பு நிற சீருடை அணிந்து விளையாடினர். ‘பிங்க் டே’யில் தென்ஆப்பிரிக்க அணி தோற்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு 7 ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்தது.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2–2 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்தது. 5–வது மற்றும் கடைசி ஆட்டம் கேப்டவுனில் நாளை மறுதினம் நடக்கிறது.


Next Story