3வது ஒரு நாள் போட்டி; இந்தியாவுக்கு 244 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது


3வது ஒரு நாள் போட்டி; இந்தியாவுக்கு 244 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது
x
தினத்தந்தி 28 Jan 2019 6:31 AM GMT (Updated: 28 Jan 2019 6:31 AM GMT)

3வது ஒரு நாள் போட்டியில் இந்தியாவுக்கு 244 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

மவுண்ட் மாங்கானு,

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.  இதில் நேப்பியரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், மவுண்ட் மாங்கானுவில் நடந்த 2வது ஆட்டத்தில் 90 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி இன்று 3வது ஒரு நாள் போட்டியில் களம் இறங்கி உள்ளது.  இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

அந்த அணியில் பந்து வீச்சாளர் சான்ட்னர் சேர்க்கப்பட்டு உள்ளார்.  காலின் டி கிராண்ட்ஹோம் நீக்கப்பட்டு உள்ளார்.  இதேபோன்று இந்திய அணியில் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.  அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டு உள்ளார்.  விஜய் சங்கருக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யா விளையாடுகிறார்.

இதனை தொடர்ந்து நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான குப்தில் (13), மன்ரோ (7) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.  தொடர்ந்து வில்லியம்சன் 28 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், டெய்லர் மற்றும் லாத்தம் இணைந்து
4வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தனர்.  தொடர்ந்து இருவரும் அரை சதம் பூர்த்தி செய்தனர்.

லாத்தம் 51 (64 பந்துகள் 1 பவுண்டரி, 1 சிக்சர்) வெளியேறிய நிலையில், அடுத்தடுத்து வந்த வீரர்களும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர்.  நிக்கோல்ஸ் (6), சான்ட்னர் (3), பிரேஸ்வெல் (15), சோதி (12), போல்ட் (2) ரன்களிலும், டெய்லர் 93 ரன்கள் எடுத்தும் வெளியேறினர்.  பெர்குசன் (2 ரன்கள்) ஆட்டமிழக்கவில்லை.

நியூசிலாந்து அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 243 ரன்கள் எடுத்துள்ளது.  இதனால் இந்தியாவுக்கு 244 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Next Story