ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டி: வெற்றிப் பாதையில் விதர்பா அணி


ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டி: வெற்றிப் பாதையில் விதர்பா அணி
x
தினத்தந்தி 6 Feb 2019 10:45 PM GMT (Updated: 6 Feb 2019 7:29 PM GMT)

ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் விதர்பா அணி வெற்றிப் பாதையில் பயணிக்கிறது.

நாக்பூர், 

ரஞ்சி கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் விதர்பா-சவுராஷ்டிரா அணிகள் இடையிலான இறுதிப்போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே விதர்பா அணி 312 ரன்னும், சவுராஷ்டிரா அணி 307 ரன்னும் எடுத்தன. 5 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய விதர்பா அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 31 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்திருந்தது. கணேஷ் சதீஷ் 24 ரன்னும், வாசிம் ஜாபர் 5 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில் 4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய விதர்பா அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. வாசிம் ஜாபர் 11 ரன்னிலும், கணேஷ் சதீஷ் 35 ரன்னிலும், அக்‌ஷய் வாத்கர் ரன் எதுவும் எடுக்காமலும், அக்‌ஷய் கார்னிவார் 18 ரன்னிலும், மொகித் காலே 38 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். நிலைத்து நின்று ஆடிய ஆதித்யா சர்வாதே 133 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 49 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார். விதர்பா அணி 92.5 ஓவர்களில் 200 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. சவுராஷ்டிரா அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் தர்மேந்திரசிங் ஜடேஜா 6 விக்கெட்டும், கம்லேஷ் மக்வானா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 206 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா அணி தகிடுதத்தம் போட்டது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்னெல் பட்டேல் 12 ரன்னிலும், ஹர்விக் தேசாய் 8 ரன்னிலும், மற்றும் நட்சத்திர வீரர் புஜாரா ரன் எதுவும் எடுக்காமலும், அர்பித் வசவதா 5 ரன்னிலும், ஷெல்டன் ஜாக்சன் 7 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

நேற்றைய முடிவில் சவுராஷ்டிரா அணி 2-வது இன்னிங்சில் 28 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்து தடுமாறிக்கொண்டிருக்கிறது. விஸ்வராஜ் ஜடேஜா 23 ரன்னுடனும், கம்லேஷ் மக்வானா 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். விதர்பா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதித்யா சர்வாதே 3 விக்கெட்டும், அக்‌ஷய் வாக்ஹரி ஒரு விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. சவுராஷ்டிரா அணியின் வெற்றிக்கு மேலும் 148 ரன்கள் தேவைப்படுகிறது. ஆனால் கைவசம் 5 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளது. ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு நன்கு எடுபடுவதால் விதர்பா அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்ல பிரகாசமான வாய்ப்பு உருவாகியுள்ளது.


Next Story