கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி - தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து


கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி - தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து
x
தினத்தந்தி 10 Feb 2019 11:28 PM GMT (Updated: 10 Feb 2019 11:28 PM GMT)

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றதுடன், தொடரையும் இழந்தது.

ஹாமில்டன், 

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று நடந்தது. இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தன. இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக குல்தீப் யாதவும், நியூசிலாந்து அணியில் லோக்கி பெர்குசனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அறிமுக வீரராக பிளைர் டிக்னெரும் சேர்க்கப்பட்டனர்.

‘டாஸ்’ ஜெயித்த இந்திய பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி காலின் முன்ரோவும், விக்கெட் கீப்பர் டிம் செய்பெர்ட்டும் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளம், சிறிய மைதானம் என்பதால் எதிர்பார்த்தது போலவே பேட்ஸ்மேன்கள் கோலோச்சினர். முன்ரோவும், செய்பெர்ட்டும் அதிரடியில் பின்னியெடுத்தனர். பேட்டில் சரியாக பட்ட பந்துகள் எல்லைக்கோட்டை நோக்கி தெறித்து ஓடின. ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் 66 ரன்களை திரட்டினர். ரன்ரேட்டை 10 ரன்களுக்கு குறையாமல் பார்த்துக் கொண்ட இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் (7.4 ஓவர்) சேர்த்தனர். செய்பெர்ட் 43 ரன்களில் (25 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) குல்தீப் யாதவின் சுழலில் விக்கெட் கீப்பர் டோனி யால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அடுத்து கேப்டன் கேன் வில்லியம்சன் இறங்கினார்.

முந்தைய ஆட்டத்தின் ஹீரோவான இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குருணல் பாண்ட்யாவின் பவுலிங்கை, இந்த முறை நியூசிலாந்து வீரர்கள் நொறுக்கித்தள்ளினர். மிடில் ஓவர்களில் அவரது பந்து வீச்சில் மொத்தம் 4 சிக்சர்கள் பறந்தன.

உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்த காலின் முன்ரோ 72 ரன்கள் (40 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசிய நிலையில் கேட்ச் ஆனார். அடுத்த வந்த வீரர்களும் அதே உத்வேகத்துடன் பேட்டை சுழட்டியதால் நியூசிலாந்து அணி 200 ரன்களை எளிதில் கடந்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 2012-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக நியூசிலாந்து 202 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் (4 ஓவரில் 26 ரன் கொடுத்து 2 விக்கெட்) தவிர மற்ற அனைத்து பவுலர்களும் ரன்களை வாரி வழங்கினர். குறிப்பாக குருணல் பாண்ட்யா 4 ஓவர்களில் 54 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

பின்னர் ‘மெகா’ இலக்கை நோக்கி இந்திய அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் (5 ரன்) முதல் ஓவரிலேயே ஆட்டம் இழந்தாலும் கேப்டன் ரோகித் சர்மாவும், தமிழகத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் விஜய் சங்கரும் கைகோர்த்து அணியை தூக்கி நிறுத்தினர். விஜய் சங்கரின் சில நேர்த்தியான ஷாட்டுகள் ரசிகர்களை பரவசப்படுத்தின.

அணிக்கு நம்பிக்கையூட்டிய இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் (46 பந்து) சேகரித்து பிரிந்தது. விஜய் சங்கர் 43 ரன்னிலும் (28 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), அடுத்து வந்த ரிஷாப் பான்ட் 28 ரன்னிலும் (12 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார்கள்.

மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 38 ரன்களில் (32 பந்து, 3 பவுண்டரி) தேவையில்லாமல் வைடாக சென்ற பந்தை அடிக்க முயற்சித்து விக்கெட் கீப்பர் செய்பெர்ட்டிடம் பிடிபட்டார். அதைத் தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யாவும் (21 ரன்), விக்கெட் கீப்பர் டோனியும் (2 ரன்) அடுத்தடுத்து வெளியேற, இந்தியாவுக்கு நெருக்கடி அதிகரித்தது. அப்போது இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 145 ரன்கள் (15.2 ஓவர்) எடுத்திருந்தது.

இந்த சூழலில் 7-வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக்கும், குருணல் பாண்ட்யாவும் இணைந்து அணியை கரைசேர்க்க போராடினர். ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டிற்கு துரத்திய இவர்கள் 22 பந்துகளில் 50 ரன்கள் கொண்டு வந்தனர். இதனால் கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட்டது. ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது.

20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி வீசினார். முதல் பந்தில் 2 ரன் எடுத்த தினேஷ் கார்த்திக் 2-வது பந்தை அடிக்கவில்லை. 3-வது பந்தில் எளிதில் ரன் எடுத்திருக்கலாம். எஞ்சிய 3 பந்துகளில் 14 ரன்களை தானே எடுத்து விடலாம் என்று நினைத்தாரோ என்னவோ, 3-வது பந்தில் பாதி தூரம் ஓடி வந்த குருணல் பாண்ட்யாவை திரும்பி போகும்படி சைகை காட்டி விட்டார். ஆனால் அவரது எண்ணம் ஈடேறவில்லை. 4-வது பந்தில் தினேஷ் கார்த்திக்கும், 5-வது பந்தில் குருணலும் தலா ஒரு ரன் எடுத்தனர். 6-வது பந்து வைடாக வீசப்பட்டதால் மறுபடியும் வீசப்பட்ட 6-வது பந்தில் தினேஷ் கார்த்திக் சிக்சர் அடித்தார். அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை.

இந்திய அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து அணி 4 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றது. தினேஷ் கார்த்திக் 33 ரன்களுடனும் (16 பந்து, 4 சிக்சர்), குருணல் பாண்ட்யா 26 ரன்களுடனும் (13 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர். 2-வது பேட்டிங்கின் போது தினேஷ் கார்த்திக் அவுட் ஆகாமல் கடைசி வரை களத்தில் நின்றும் இந்திய அணி தோற்பது இதுவே முதல்முறையாகும். நியூசிலாந்து வீரர்கள் காலின் முன்ரோ ஆட்டநாயகன் விருதையும், கீப்பர் டிம் செய்பெர்ட் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்தும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்று இருந்தன.

20 ஓவர் தொடரை பறிகொடுத்தாலும் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்ற திருப்தியுடன் இந்திய அணி தாயகம் திரும்புகிறது.

இந்திய அணி அடுத்து சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 24-ந்தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.

ரோகித் சர்மா கருத்து

தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘கடைசி வரை போராடியும் இலக்கை தொட முடியாமல் போனது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. 210 ரன்களுக்கு மேலான இலக்கை விரட்டிப்பிடிப்பது எப்போதுமே கடினம் தான். இருப்பினும் கடைசி பந்து வரை முயற்சித்தோம். பதற்றமான தருணத்தில் நியூசிலாந்து நன்றாக ஆடி வெற்றியை வசப்படுத்தி விட்டது. வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள். இந்த பயணத்தில் இருந்து நிறைய சாதகமான விஷயங்களை எடுத்துக் கொள்ள முடியும். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து சென்று விட வேண்டும். அடுத்து சொந்த ஊரில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ள நிலையில், இந்த தொடரை வென்று கோப்பையுடன் தாயகம் திரும்பியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்’ என்றார்.

டோனி ‘300’

இந்திய முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனிக்கு ஒட்டுமொத்தத்தில் இது 300-வது 20 ஓவர் போட்டியாகும். இதில் சர்வதேச மற்றும் உள்ளூர், லீக் 20 ஓவர் ஆட்டங்களும் அடங்கும். இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்தியர், உலக அளவில் 13-வது வீரர் என்ற சிறப்பை டோனி பெற்றார்.

வெற்றிப்பயணம் முடிவு

* சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக 10 தொடர்களை (8-ல் வெற்றி, 2 சமன்) இழக்காமல் இருந்தது. அந்த கம்பீர பயணம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அத்துடன் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி இழப்பது இதுவே முதல்முறையாகும்.

* இந்த தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்ட்யா மொத்தம் 131 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் எடுத்துள்ளார். இதன் மூலம் இரு நாட்டு அணிகள் இடையிலான 20 ஓவர் தொடர் ஒன்றில் அதிக ரன்களை வழங்கிய இந்திய பவுலர் என்ற மோசமான சாதனையை பெற்று இருக்கிறார்.

அதிசய ஒற்றுமை

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் நமது வீரர்களால் இலக்கை வெற்றிகரமாக எட்ட முடியவில்லை. முன்னதாக இதே மைதானத்தில் நடந்த பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணியின் வெற்றிக்கு இறுதி ஓவரில் 16 ரன்களே தேவையாக இருந்தது. அதுவும் ஏமாற்றத்தில் முடிந்திருக்கிறது.

அது மட்டுமின்றி இந்திய ஆண்கள் அணியும் சரி, பெண்கள் அணியும் சரி, நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை சொந்தமாக்கி விட்டு, 20 ஓவர் தொடரை பறிகொடுத்திருக்கிறது.


Next Story