ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணி நாளை மறுதினம் தேர்வு ரோகித் சர்மாவுக்கு ஓய்வு?


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணி நாளை மறுதினம் தேர்வு ரோகித் சர்மாவுக்கு ஓய்வு?
x
தினத்தந்தி 12 Feb 2019 10:00 PM GMT (Updated: 12 Feb 2019 8:51 PM GMT)

சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கும் இந்திய அணி நாளை மறுதினம் தேர்வு செய்யப்படுகிறது.

மும்பை, 

சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கும் இந்திய அணி நாளை மறுதினம் தேர்வு செய்யப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணி வருகை

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தியா–ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 24–ந்தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. உலக கோப்பைக்கு முன்பாக இந்திய அணி பங்கேற்கும் கடைசி சர்வதேச தொடர் இது தான்.

இந்த போட்டித் தொடருக்கான இந்திய அணி நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்படுகிறது. நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் கடைசி 2 ஆட்டங்கள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் ஆடாத கேப்டன் விராட் கோலிக்கு அணிக்கு திரும்புகிறார்.

இதே போல் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் எல்லா போட்டிகளிலும் விளையாடிய ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோருக்கு ஆஸ்திரேலிய தொடரில் சில ஆட்டங்களில் ஓய்வு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

ரோகித்துக்கு ஓய்வு?

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘மூத்த வீரர்களின் பணிச்சுமை குறித்து அணித் தேர்வு குழு கூட்டத்தில் நிச்சயம் விவாதிக்கப்படும். ஒவ்வொரு போட்டி மற்றும் தொடர்களுக்கு இடையே வீரர்களுக்கு போதுமான ஓய்வு அளிப்பதை உறுதி செய்வதில் அணி நிர்வாகமும், தேர்வு குழுவும் தெளிவாக இருக்கின்றன.

நியூசிலாந்து தொடரில் கடைசி கட்ட ஆட்டங்களில் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது போன்று, இந்த தொடரில் சில ஆட்டங்களுக்கு ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம். அதே சமயம் ஆஸ்திரேலிய தொடரில் தொய்வின்றி முழு உத்வேகத்துடன் ஆட வேண்டியது முக்கியம். உலக கோப்பைக்கு முன்பாக நடக்கும் இந்த தொடரில் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கிவிடக்கூடாது. அதற்கு ஏற்றவாறு சரியான கலவையில் அணியை தேர்வு செய்ய வேண்டியது அவசியமாகும்’ என்றார்.


Next Story