வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு ஆறுதல் வெற்றி


வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு ஆறுதல் வெற்றி
x
தினத்தந்தி 13 Feb 2019 10:45 PM GMT (Updated: 13 Feb 2019 9:21 PM GMT)

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பெற்றது.

செயின்ட் லூசியா, 

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பெற்றது.

கடைசி டெஸ்ட்

இங்கிலாந்து–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து அணி 277 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் அணி 154 ரன்களும் எடுத்தன.

123 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 4–வது நாளில் மதிய உணவு இடைவேளைக்கு முன்பு 5 விக்கெட் இழப்புக்கு 361 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜோரூட் 122 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.

இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி

பின்னர் 485 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் 2–வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியினர், இங்கிலாந்து வீரர்களின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வேகமாக விக்கெட்டை இழந்து வெளியேறினார்கள். 69.5 ஓவர்களில் வெஸ்ட்இண்டீஸ் அணி 252 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோஸ்டன் சேஸ் (102 ரன்கள், 91 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) சதம் அடித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் போராடினாலும், அவருடன் யாரும் நிலைத்து நின்று ஆடாததால் அவரது ஸ்கோர் அணிக்கு பலன் அளிக்காமல் வீணானது.

இங்கிலாந்து அணிக்கு இது ஆறுதல் வெற்றியாகும். ஏற்கனவே நடந்த முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் முறையே வெஸ்ட்இண்டீஸ் அணி 381 ரன்கள் வித்தியாசத்திலும், 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது. முடிவில் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை வெஸ்ட்இண்டீஸ் அணி 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இங்கிலாந்து வீரர் மார்க்வுட் ஆட்டநாயகன் விருதையும், வெஸ்ட்இண்டீஸ் வீரர் கெமார் ரோச் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர். இந்த போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 38 பந்துகளை வைடாக வீசினார்கள். டெஸ்ட் போட்டியில் அதிக வைடுகள் வீசப்பட்ட போட்டி இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாள் போட்டி

இதற்கிடையில் 3–வது நாள் போட்டியின் போது இங்கிலாந்து அணி கேப்டன் ஜோரூட்டுக்கும், வெஸ்ட்இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ‌ஷனோன் கேப்ரியலுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் ஸ்டம்பில் உள்ள மைக்கில் பதிவாகி இருக்கிறது. அதில் ‌ஷனோன் கேப்ரியல், ஜோரூட்டை தரக்குறைவாக பேசியது இடம் பெற்றுள்ளது. ஆட்ட நடுவர்கள் அளித்த புகாரின் பேரில் ‌ஷனோன் கேப்ரியல் மீதான குற்றச்சாட்டை ஐ.சி.சி. பதிவு செய்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி அவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது முடிவு செய்யப்படும்.

டெஸ்ட் போட்டி தொடரை தொடர்ந்து இவ்விரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது ஒரு நாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் வருகிற 20–ந் தேதி நடக்கிறது.


Next Story