ரெஸ்ட் ஆப் இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் ‘டிரா’: இரானி கோப்பையை மீண்டும் வென்றது விதர்பா அணி


ரெஸ்ட் ஆப் இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் ‘டிரா’: இரானி கோப்பையை மீண்டும் வென்றது விதர்பா அணி
x
தினத்தந்தி 16 Feb 2019 10:30 PM GMT (Updated: 16 Feb 2019 8:49 PM GMT)

ரெஸ்ட் ஆப் இந்தியாவுக்கு எதிரான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘டிரா’ கண்ட விதர்பா அணி முதல் இன்னிங்சில் முன்னிலை அடிப்படையில் சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

நாக்பூர், 

ரெஸ்ட் ஆப் இந்தியாவுக்கு எதிரான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘டிரா’ கண்ட விதர்பா அணி முதல் இன்னிங்சில் முன்னிலை அடிப்படையில் சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

இரானி கிரிக்கெட்

நடப்பு ரஞ்சி சாம்பியன் விதர்பா– ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி நாக்பூரில் கடந்த 12–ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் ரெஸ்ட் ஆப் இந்தியா 330 ரன்களும், விதர்பா 425 ரன்களும் எடுத்தன. 95 ரன்கள் பின்தங்கிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 2–வது இன்னிங்சில் ஹனுமா விஹாரியின் சதத்தின் உதவியுடன் 3 விக்கெட்டுக்கு 374 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் விதர்பா அணிக்கு 280 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி 2–வது இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணி 4–வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 37 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து நிதானமாக ஆடிய விதர்பா அணி வெற்றியை நோக்கி பயணித்தது. சஞ்சய் 42 ரன்களும், அதர்வா டெய்ட் 72 ரன்களும், மொகித் காலே 37 ரன்களும் எடுத்து வெளியேறினர். நிலைத்து நின்று போராடிய கணேஷ் சதீஷ் 87 ரன்களில் (168 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். அப்போது விதர்பா அணி 103.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு மேற்கொண்டு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இரண்டு அணிகளின் கேப்டன்களும் திடீரென இந்த போட்டியை டிராவில் முடிக்க ஒப்புக் கொண்டனர்.

விதர்பா சாம்பியன்

இருப்பினும் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் மராட்டியத்தை சேர்ந்த விதர்பா அணி தொடர்ந்து 2–வது முறையாக இரானி கோப்பையை வசப்படுத்தியது. இதன் மூலம் இரானி கோப்பையை அடுத்தடுத்து வென்ற 3–வது ரஞ்சி சாம்பியன் அணி என்ற பெருமையை விதர்பா பெற்றது. இதற்கு முன்பு மும்பை, கர்நாடக அணிகள் இச்சாதனையை செய்திருந்தன.

ரெஸ்ட் ஆப் இந்தியா அணியில் கேப்டன் ரஹானே, ஹனுமா விஹாரி, ஸ்ரேயாஸ் அய்யர், மயங்க் அகர்வால், இஷான் கி‌ஷன் என்று நட்சத்திர பட்டாளம் இருந்த போதிலும் விதர்பாவை மிரட்ட முடியாமல் முடியாமல் ஏமாற்றத்தை சந்தித்தனர். ரஹானே கூறுகையில், ‘ரஞ்சி கோப்பையையும், இரானி கோப்பையையும் ஒரு அணி அடுத்தடுத்து வெல்வது எளிதான வி‌ஷயம் அல்ல. விதர்பா அணிக்கு எனது வாழ்த்துகள். ஒவ்வொரு ரஞ்சி அணியும் விதர்பாவிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். முதல் இன்னிங்சில் கடைசி 8 விக்கெட்டுகளை வேகமாக இழந்தது பின்னடைவாக அமைந்தது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது 400 ரன்களுக்கு மேல் எடுக்கப்படக்கூடிய ஆடுகளம். அது தான் வித்தியாசத்தை ஏற்படுத்தி விடடது.’ என்றார்.

விதர்பா கேப்டன் பைஸ் பாசல் கூறுகையில், ‘சீசன் முழுவதும் ஒட்டுமொத்த எங்களது அணி சிறப்பாக விளையாடியது. இரானி கோப்பை போட்டியில் வாசிம் ஜாபர், உமேஷ் யாதவ் ஆகியோர் எங்கள் அணியில் இல்லாத போதிலும் மற்ற வீரர்களின் செயல்பாடு அற்புதமாக இருந்தது. அணியை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்றார்.


Next Story