இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி வெற்றி


இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி வெற்றி
x
தினத்தந்தி 22 Feb 2019 11:38 PM GMT (Updated: 22 Feb 2019 11:38 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய பெண்கள் அணி வெற்றிபெற்றது.

மும்பை,

இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.4 ஓவர்களில் 202 ரன்கள் சேர்த்து ‘ஆல்-அவுட்’ ஆனது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 48 ரன்னும், கேப்டன் மிதாலி ராஜ் 44 ரன்னும், ஜூலன் கோஸ்வாமி 30 ரன்னும் எடுத்தனர்.

தொடர்ந்து களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. 4-வது விக்கெட்டுக்கு சற்று நேரம் நிலைத்து நின்று ஆடிய நாதலி சிவெர் அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்து ரன்-அவுட் ஆனார். அதன் பிறகு விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. 41 ஓவர்களில் இங்கிலாந்து அணி 136 ரன்னில் சுருண்டது. இதனால் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் கேப்டன் ஹீதர் நைட் 39 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் எக்தா பிஷ்த் 4 விக்கெட்டும், தீப்தி ஷர்மா 2 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் ஷிகா பாண்டே 2 விக்கெட்டும் வீழ்த்தினர். எக்தா பிஷ்த் ஆட்டநாயகி விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 2-வது ஆட்டம் இதே மைதானத்தில் 25-ந் தேதி நடக்கிறது.


Next Story