பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை: இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் பேட்டி


பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை: இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் பேட்டி
x
தினத்தந்தி 23 Feb 2019 1:53 AM GMT (Updated: 23 Feb 2019 1:53 AM GMT)

உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் தெரிவித்தார்.

புதுடெல்லி

காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைபடை தாக்குதலில் இந்திய துணைராணுவ படையினர் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் எதிரொலியாக, பாகிஸ்தானுடன் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாடக்கூடாது என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. அத்துடன் பயங்கரவாதத்துடன் தொடர்பு வைத்துள்ள பாகிஸ்தானை கிரிக்கெட்டில் இருந்து தனிமைப்படுத்தவும் இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சி மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதன் முடிவில் நிர்வாக கமிட்டியின் தலைவர் வினோத் ராய் நிருபர்களிடம் கூறியதாவது:-

உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி ஜூன் 16-ந்தேதி பாகிஸ்தானுடன் மோதும் வகையில் போட்டி அட்டவணை அமைந்துள்ளது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் விளையாடுவதா, வேண்டாமா என்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. உலக கோப்பை போட்டிக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ளது. எனவே உரிய நேரத்தில் அது குறித்து மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து இறுதி முடிவு எடுப்போம்.

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்த எங்களது கவலையையும், வேதனையையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) தெரிவித்துள்ளோம். இதையொட்டி ஐ.சி.சி.க்கு கடிதம் எழுதியுள்ளோம். அதில், உலக கோப்பை கிரிக்கெட்டின் போது வீரர்களுக்கு கூடுதலான பாதுகாப்பு தேவை என்பதையும், கிரிக்கெட் விளையாடும் நாடுகள் எதிர்காலத்தில், தீவிரவாதத்துக்கு ஆதரவு தரும் நாடுகளுடன் எந்தவிதமான உறவும் வைத்துக் கொள்ளக்கூடாது என்பதையும் வலியுறுத்தி இருக்கிறோம். இவ்வாறு வினோத்ராய் கூறினார்.

Next Story