எல்லா விளையாட்டில் இருந்தும் பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும் - இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தல்


எல்லா விளையாட்டில் இருந்தும் பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும் - இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 Feb 2019 11:00 PM GMT (Updated: 24 Feb 2019 9:47 PM GMT)

பாகிஸ்தானை எல்லா விளையாட்டில் இருந்தும் தனிமைப்படுத்த வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது.

புதுடெல்லி,

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்துள்ள பாகிஸ்தானை எல்லா விளையாட்டில் இருந்தும் தனிமைப்படுத்த வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது.

காஷ்மீரில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் இந்திய துணை ராணுவப்படையினர் மீது நடத்திய கொடூர தாக்குதல் எதிரொலியாக உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த ஆட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் சிலர் கூறியுள்ளனர்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜூன் 16-ந்தேதி தான் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. அதற்கு இன்னும் அதிக நாட்கள் இருப்பதால் உரிய நேரத்தில் பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே கூறியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் விளையாடாவிட்டால் சிக்கல் நமக்கு தான் ஏற்படும். எங்களது இலக்கு எதுவென்றால், ஒரு கிரிக்கெட் தேசமான பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும். பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாட்டுடன் வருங்காலத்தில் எந்தவிதமான உறவும் வைத்துக் கொள்ளாதீர்கள் என்று கிரிக்கெட் விளையாடும் நாடுகளை ஏற்கனவே வலியுறுத்தியுள்ளோம்.

இனவெறி கொள்கை காரணமாக தென்ஆப்பிரிக்காவுக்கு 1970-ம் ஆண்டு 1991-ம் ஆண்டு வரை சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதே போன்று பாகிஸ்தான் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். அதாவது கிரிக்கெட் மட்டுமல்ல எல்லா வகையான போட்டிகளிலும் பாகிஸ்தானுக்கு தடை விதிக்கப்பட வேண்டும். விளையாட்டில் இருந்து பாகிஸ்தானை தனிமைப்படுத்துவது அரசாங்க ரீதியாகத் தான் செய்ய முடியும். இதற்காக மற்ற நாடுகளுடன் பேச்சுவாத்தை நடத்தி கருத்து ஒற்றுமை ஏற்படுத்த அரசு முயற்சித்து வருகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைமை நிர்வாக கமிட்டி உறுப்பினர்களின் கூட்டம் துபாயில் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் காஷ்மீர் தாக்குதல் பற்றிய எங்களது கவலையையும், உலக கோப்பை போட்டிக்கான பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் எடுத்துக் கூறுவோம். இவ்வாறு வினோத் ராய் கூறினார்.


Next Story