ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் போட்டி கட்டணத்தை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்குவதாக அறிவிப்பு


ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்  போட்டி கட்டணத்தை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்குவதாக அறிவிப்பு
x
தினத்தந்தி 8 March 2019 10:30 PM GMT (Updated: 8 March 2019 10:11 PM GMT)

காஷ்மீரில் உள்ள புலவாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ராணுவ வீரர்களுக்குரிய தொப்பியை அணிந்து விளையாடினர்.

ராஞ்சி,

காஷ்மீரில் உள்ள புலவாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3–வது ஒரு நாள் போட்டியின் போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் ராணுவ வீரர்களுக்குரிய தொப்பியை அணிந்து விளையாடினர். ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களுக்கும் அந்த விசே‌ஷ தொப்பியை விக்கெட் கீப்பர் டோனி வழங்கினார். ராணுவத்தில் கவுரவ பொறுப்பு வகிக்கும் டோனியின் யோசனையின் பேரில் இந்த ஆட்டத்தை ராணுவ வீரர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பயன்படுத்திக் கொண்டனர்.

ராணுவ தொப்பி அணிந்து மிடுக்குடன் வலம் வந்த இந்திய கேப்டன் விராட் கோலி, ‘இந்த ஆட்டத்தில் பங்கேற்பதன் மூலம் கிடைக்கும் போட்டி கட்டணத்தை, நாங்கள் தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்குகிறோம். இதே போல் நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு உதவும் வகையில் நிதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.

ஆடும் லெவன் அணியில் இடம் பெறும் ஒவ்வொரு இந்திய வீரர்களுக்கும் போட்டி கட்டணம் ரூ.8 லட்சம் ஆகும். இதே போல் களம் காணாமல் வெளியில் இருக்கும் வீரர்களுக்கு அதில் பாதியாக ரூ.4 லட்சம் ஊதியமாக கிடைக்கும். இந்த தொகை அனைத்தும் ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் அறிவித்திருப்பதை, ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வரவேற்றுள்ளனர்.


Next Story