‘என்னால் மீண்டும் கிரிக்கெட் விளையாட முடியும்’ -ஸ்ரீசாந்த்


‘என்னால் மீண்டும் கிரிக்கெட் விளையாட முடியும்’ -ஸ்ரீசாந்த்
x
தினத்தந்தி 16 March 2019 12:01 AM GMT (Updated: 16 March 2019 12:01 AM GMT)

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட ஆயுட்கால தடையை ரத்து, என்னால் மீண்டும் கிரிக்கெட் விளையாட முடியும்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட ஆயுட்கால தடையை ரத்து ‘என்னால் மீண்டும் கிரிக்கெட் விளையாட முடியும்’ ஆதரவான தீர்ப்பு வெளியான பிறகு ஸ்ரீசாந்த் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

‘டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ் 42 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் போது, 36 வயதான என்னால் இன்னும் ஏன்? சில காலம் கிரிக்கெட் விளையாட முடியாது. எனது வாழ்க்கையில் இன்னும் மிஞ்சி இருப்பது என்ன வென்று எனக்கு தெரியாது. எது என்னுடைய வாழ்க்கை என்று நினைத்தேனோ? அந்த கிரிக்கெட்டை கடந்த 6 வருடங்களாக நான் விளையாடவில்லை. நாட்டின் உயரிய கோர்ட்டின் தீர்ப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் நிச்சயம் மதித்து கிரிக்கெட் களத்துக்கு மீண்டும் திரும்ப என்னை அனுமதிக்கும் என்று நினைக்கிறேன். இனிமேல் பள்ளி மைதானத்துக்கு பயிற்சிக்கு சென்றால் என்னை யாரும் அனுமதிக்கமாட்டேன் என்று சொல்லமாட்டார்கள் என்று நம்புகிறேன். கிரிக்கெட்டில் என்னால் என்ன செய்ய முடியுமோ? அதனை செய்ய விரும்புகிறேன். வயது என்பது ஒவ்வொருவர் மனதை பொறுத்த விஷயமாகும்.

ஸ்காட்லாந்து கிளப் கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும் என்று மீண்டும் விரும்புகிறேன். கடந்த ஆண்டு அந்த போட்டியில் விளையாட நான் நினைத்தேன். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. கடந்த 6 ஆண்டுகளாக முதல் தர போட்டியில் விளையாடவில்லை.

இருண்ட காலத்தில் எனது பெற்றோர் மற்றும் என்னுடைய மனைவி, அவரது பெற்றோர் என் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து இருந்தனர். அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஹர்பஜன்சிங், ஷேவாக், சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா உள்ளிட்ட வீரர்களுடன் நான் தொடர்பில் இருக்கிறேன். அவர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்’. இவ்வாறு ஸ்ரீசாந்த் கூறினார்.

ஸ்ரீசாந்த், 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வென்ற இந்திய அணியிலும், 2011-ம் ஆண்டு உலக கோப்பையை (50 ஓவர்) வென்ற இந்திய அணியிலும் இடம் பிடித்தவர் ஆவார். அவர் இந்திய அணிக்காக 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் பத்து 20 ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார். வருகிற 18-ந் தேதி நடைபெறும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி கூட்டத்தில் ஸ்ரீசாந்த் விவகாரம் குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.

Next Story