சென்னையில் 23-ந் தேதி நடைபெறும்: ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை அமோகம் - ஒரே நாளில் விற்று தீர்ந்தது


சென்னையில் 23-ந் தேதி நடைபெறும்: ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை அமோகம் - ஒரே நாளில் விற்று தீர்ந்தது
x
தினத்தந்தி 16 March 2019 11:36 PM GMT (Updated: 16 March 2019 11:36 PM GMT)

சென்னையில் வருகிற 23-ந் தேதி நடைபெறும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் தொடக்க லீக் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனைக்கு அமோக வரவேற்பு இருந்தது. நேற்று ஒரே நாளில் எல்லா டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது.

சென்னை,

12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா சென்னையில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 5-ந் தேதி வரையிலான இரண்டு வார காலத்துக்கான போட்டி அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் முழு அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் நாளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் வருகிற 23-ந் தேதி இரவு 8 மணிக்கு அரங்கேறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சென்னையில் நடைபெறும் தொடக்க ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள டிக்கெட் கவுண்ட்டரில் நேற்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது. டோனி தலைமையிலான சென்னை அணியும், விராட்கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் மோதும் தொடக்க ஆட்டத்தை காண ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்பட்டது.

போட்டியை நேரில் பார்க்க ஆர்வம் கொண்ட ரசிகர்கள் நேற்று முன்தினம் இரவு முதலே சேப்பாக்கம் ஸ்டேடியம் முன்பு திரள தொடங்கினார்கள். உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்து வந்து இருந்த ரசிகர்களும் ஸ்டேடியத்துக்கு வெளியில் இரவையும் பொருட்படுத்தாமல் காத்து கிடந்தனர். மேலும் நேற்று அதிகாலை முதல் ரசிகர்களின் படையெடுப்பு அதிகரித்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். ஒரு கட்டத்தில் ரசிகர்கள் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார்கள்.

பின்னர் ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் நீண்ட வரிசையில் பொறுமையாக காத்து நின்று டிக்கெட்டுகளை வாங்கி சென்றனர். இந்த போட்டிக்கான டிக்கெட் விலை குறைந்தபட்சமாக ரூ.1,300 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதிபட்ச டிக்கெட் விலை ரூ.6,500 ஆகும். ரூ.2,500, ரூ.5 ஆயிரம் விலையிலும் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டன. இதேநேரத்தில் ஆன்-லைனிலும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. ரூ.1,300 விலை கொண்ட டிக்கெட் முதலில் விற்று தீர்த்தது. இதனை அடுத்து மாலையில் எல்லா விலையிலான டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. இதனால் டிக்கெட் வாங்க காத்து நின்ற சிலர் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.


Next Story