‘ஐ.பி.எல். கோப்பையை மீண்டும் வெல்வது கடினமானது’ - சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பேட்டி


‘ஐ.பி.எல். கோப்பையை மீண்டும் வெல்வது கடினமானது’ - சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பேட்டி
x
தினத்தந்தி 20 March 2019 11:15 PM GMT (Updated: 20 March 2019 10:03 PM GMT)

‘ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கோப்பையை மீண்டும் வெல்வது கடினமானது’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்தார்.

சென்னை,

12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் சென்னையில் நாளை மறுநாள் (23-ந் தேதி) தொடங்குகிறது. இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதையொட்டி சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர். போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான பிரத்யேக பொருட்கள் ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், ‘ஆல்-ரவுண்டர்’ கேதர் ஜாதவ் ஆகியோர் பங்கேற்று பொருட்களை அறிமுகம் செய்து வைத்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன், மார்க்கெட்டிங் தலைவர் சங்கரன் உன்னி உள்ளிடடோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த ஆண்டை போல் பேட்டிங்கில் கேப்டன் டோனி பெரும்பாலும் 4-வது வீரராக களம் இறங்குவார். தேவைப்பட்டால் அவரது பேட்டிங் வரிசையில் லேசான மாற்றம் செய்யப்படும். கடந்த 10 மாதங்களாக டோனி நல்ல பார்மில் இருக்கிறார். கேதர் ஜாதவும் நல்ல நிலையில் உள்ளார். எங்களது அணியின் பேட்டிங் வரிசையில் எந்த பிரச்சினையும் இல்லாதது மகிழ்ச்சி அளிக்கிறது.

கேதர் ஜாதவ், டோனி, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா ஆகிய எங்கள் அணி வீரர்கள் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறும் வாய்ப்பில் உள்ளனர். இதேபோல் அணியில் இடம் பிடித்து இருக்கும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீரர்கள் உலக கோப்பை போட்டிக்காக விரைவில் ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகக்கூடும். எனவே எந்த வீரர்கள் முன்கூட்டியே வெளியேறுவார்கள். அணியில் கடைசி வரை நீடிக்கக்கூடிய வீரர்கள் யார் என்பதை கருத்தில் கொண்டு ஆடும் லெவன் அணிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வீரர்களின் பணிச்சுமையை நிர்வகிக்க வேண்டியது ஆட்டத்தின் ஒரு அங்கமாகும். பவுலர்களின் பணிச்சுமையை கவனிப்பது மிகப்பெரிய சவாலாகும்.

மிட்செல் சான்ட்னெர் (நியூசிலாந்து சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்) இந்திய துணைகண்டத்தில் நன்றாக பந்து வீசி இருக்கிறார். காயம் காரணமாக கடந்த ஆண்டு விளையாடாத அவர் எங்கள் அணியில் இடம் பெற்று இருப்பது சாதகமானதாகும். நாங்கள் வலுவான பேட்டிங் வரிசையை கொண்டு இருக்கிறோம். பந்து வீச்சிலும் வித்தியாசத்தை காட்டக்கூடிய பவுலர்களை பெற்று இருக்கிறோம். ஐ.பி.எல். கோப்பையை மீண்டும் வெல்வது தான் எங்களுடைய சவாலாகும். ஆனால் அது கடினமானது என்பதை அறிவோம். அதற்காக நாங்கள் கடுமையாக உழைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் கேதர் ஜாதவ் கூறியதாவது:-

‘உலக கோப்பை போட்டியில் விளையாட வேண்டும் என்பது எல்லா கிரிக்கெட் வீரர்களின் கனவாக இருக்கும். அதில் நானும் விதிவிலக்கு அல்ல. அடுத்த 2 மாதங்கள் எனது கவனம் எல்லாம் ஐ.பி.எல். போட்டியில் தான் இருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கலாசாரத்தையும், சூழலையும் நான் அதிகம் விரும்புகிறேன். கடந்த ஆண்டு நான் இங்கு 10 நாட்கள் மட்டுமே இருந்தேன். காயத்தால் கடந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றிய அழகிய தருணத்தை நான் தவற விட்டேன்.

கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறேன். இந்த சீசனில் நான் முழுமையாக விளையாடுவதை எதிர்நோக்கி இருக்கிறேன். அணிக்கு சிறந்த பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்திய அணிக்காக விளையாடுகையில் பந்து வீசிய ஓவர்கள் அளவுக்கு ஐ.பி.எல். போட்டியில் பந்து வீச வேண்டியது இருக்காது என்று நினைக்கிறேன். நாங்கள் எல்லோரும் தொழில்முறை வீரர்கள். எங்களது உடல் தகுதியை எப்படி பேண வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். ஒவ்வொரு ஆட்டத்திற்கு பிறகும் உடல் சோர்வில் இருந்து மீண்டு வருவது முக்கியமானதாகும். புத்துணர்ச்சியுடன் இருந்தால் தான் நன்றாக செயல்பட முடியும். பணிச்சுமை என்பது ஒவ்வொரு வீரருக்கும் வித்தியாசப்படும். எங்களுடைய டிரெய்னர் மற்றும் பிசியோதெரபிஸ்டுடன் தொடர்பில் இருக்கிறோம். அவர்கள் வழங்கும் அறிவுரையை அப்படியே ஏற்று செயல்படுவோம். மேற்கண்டவாறு கேதர் ஜாதவ் கூறினார்.


Next Story