ஐபிஎல் கிரிக்கெட்: கே.எல்.ராகுல் அபாரம்! மும்பையை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்


ஐபிஎல் கிரிக்கெட்: கே.எல்.ராகுல் அபாரம்! மும்பையை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
x
தினத்தந்தி 30 March 2019 10:36 AM GMT (Updated: 30 March 2019 8:19 PM GMT)

கே.எல்.ராகுலின் அபார ஆட்டத்தால் மும்பை இந்தியன்ஸ் அணியை பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

மொகாலி,

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய 9-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. மொகாலியில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி  முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

இதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங்கை துவங்கியது. மும்பை அணியின் துவக்க ஜோடியான ரோகித் சர்மா, டி காக் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் விக்கெட்டுக்கு 51 ரன்களை சேர்த்த இந்த ஜோடியை விலிஜோன் பிரித்தார். சிறப்பாக விளையாடி வந்த ரோகித்சர்மா 18 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய சூர்யகுமார் யாதவ் 11 ரன்களில் வெளியேறினார். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த டி காக் 39 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்திருந்த போது சமி பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். 

மந்தமாக விளையாடிய யுவராஜ் சிங் 22 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட பொல்லார்டு (7  ரன்கள்) ஏமாற்றம் அளித்தார். கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்ட்யா விளாசித்தள்ள மும்பை அணியின் ரன்வேகம் கணிசமாக உயர்ந்தது. 19 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து இருந்தபோது ஹர்திக் பாண்ட்யா சமி பந்தில் ஆட்டமிழந்தார். 

மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்துள்ளது. 

இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணியில், வழக்கம் போல் கிரிஸ் கெயில் அதிரடி காட்டினார். சர்வ சாதாரணமாக சிக்சர்களை விளாசிய கிரிஸ் கெயில், ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். 24 பந்துகளில் 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 40 ரன்கள் சேர்த்த கிறிஸ் கெயில் க்ருணால் பாண்ட்யா பந்தில் பவுண்டரி லைனில் கேட்ச் ஆகி வெளியேறினார். 

மறுமுனையில், நிதனாமாக ஆடி வந்த கே.எல்.ராகுல் படிப்படியாக வேகத்தை அதிகரித்தார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் அரைசதம் விளாசினார். 3-வதாக களம் இறங்கிய மயங்க் அகர்வாலும் தன் பங்குக்கு 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதற்கு அடுத்து மில்லருடன் கைகோர்த்த கே.எல்.ராகுல் அணியை 19-வது ஓவரில் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்சென்றார். பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வென்றது. லோகேஷ் ராகுல் 57 பந்துகளில் 71 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

Next Story