டெஸ்ட் சாம்பியன்ஷிப் கவுரவத்தை தக்கவைத்தது, இந்திய அணி


டெஸ்ட் சாம்பியன்ஷிப் கவுரவத்தை தக்கவைத்தது, இந்திய அணி
x
தினத்தந்தி 1 April 2019 10:55 PM GMT (Updated: 1 April 2019 10:55 PM GMT)

டெஸ்ட் சாம்பியன்ஷிப் கவுரவத்தை இந்திய அணி தக்கவைத்துக் கொண்டது.

துபாய்,

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 1-ந் தேதி நிலவரப்படி முதலிடத்தில் இருக்கும் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கதாயுதத்துடன், ரொக்கப்பரிசு வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கவுரவத்தை விராட்கோலி தலைமையிலான இந்திய அணி மீண்டும் கைப்பற்றி இருக்கிறது. இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கவுரவத்தை தொடர்ந்து 3-வது ஆண்டாக பெற்றுள்ளது. முதலிடத்தை பிடித்துள்ள இந்திய அணிக்கு (116 புள்ளிகள்) கதாயுதத்துடன் ரூ.7 கோடி பரிசாக கிடைக்கும். 2-வது இடத்தை பெற்றுள்ள நியூசிலாந்து அணிக்கு (108 புள்ளிகள்) ரூ.3½ கோடி பரிசாக வழங்கப்படும்.

ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் கதாயுதத்தை மீண்டும் கைப்பற்றி இருப்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி கருத்து தெரிவிக்கையில், ‘மீண்டும் இந்த கவுரவத்தை பெற்று இருப்பதை பெருமையாக கருதுகிறோம். எல்லா வடிவிலான போட்டியிலும் எங்கள் அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. டெஸ்ட் போட்டியில் மீண்டும் முதலிடத்தை தக்க வைத்து இருப்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. டெஸ்ட் போட்டியின் முக்கியத்துவம் எங்களுக்கு தெரியும். இதில் சிறந்தவர்கள் தான் முன்னேற்றம் காண முடியும். இந்த ஆண்டின் கடைசியில் தொடங்க இருக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம்’ என்றார்.


Next Story