சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ‘கடைசி 5 ஓவர் சிறப்பாக செயல்படாதது தோல்விக்கு காரணம்’ - ராஜஸ்தான் கேப்டன் ரஹானே கருத்து


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ‘கடைசி 5 ஓவர் சிறப்பாக செயல்படாதது தோல்விக்கு காரணம்’ - ராஜஸ்தான் கேப்டன் ரஹானே கருத்து
x
தினத்தந்தி 1 April 2019 11:02 PM GMT (Updated: 1 April 2019 11:02 PM GMT)

‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கடைசி 5 ஓவர்கள் சிறப்பாக செயல்படாதது எங்கள் தோல்விக்கு காரணம்’ என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரஹானே தெரிவித்தார்.

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசித்தது. கடந்த சீசனுடன் சேர்த்து சென்னை அணி தொடர்ச்சியாக பெற்ற 6-வது வெற்றி இதுவாகும். கடந்த ஆண்டில் கடைசி 3 ஆட்டத்திலும் சென்னை அணி வென்று இருந்தது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது. கேப்டன் டோனி 75 ரன்கள் (46 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். பின்னர் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்து தொடர்ச்சியாக 3-வது தோல்வியை சந்தித்தது. சென்னை அணியின் கேப்டன் டோனி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி அளித்த பேட்டியில், ‘நாங்கள் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தில் நிலைத்து நின்று ரன் குவிக்க வேண்டியது அவசியமானதாக இருந்தது. பனியின் தாக்கம் இருக்கும் என்பதை நாங்கள் அறிந்து இருந்தோம். பேட்ஸ்மேன்கள் ஆட்டம் இழக்காமல் இருந்தால் கடைசி கட்ட ஓவர்களிலும் எங்களால் விரைவாக ரன் சேர்க்க முடியும் என்று நினைத்து ஆடினோம். எதிரணியில் இடக்கை பேட்ஸ்மேன்கள் மிகவும் குறைவாக இருந்ததால் இடக்கை சுழற்பந்து வீச்சாளரான மிட்செல் சான்ட்னெர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டார். இம்ரான் தாஹிர் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. மற்ற சுழற்பந்து வீச்சாளர்கள் ரன்கள் விட்டுக்கொடுத்ததால் வேகப்பந்து வீச்சாளர் தங்களது திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. போட்டி போகப்போக எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்கும். வரும் போட்டிகளில் வீரர்கள் தங்கள் ஆட்ட திட்டத்தை சிறப்பாக அமல்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

தோல்வி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரஹானே கருத்து தெரிவிக்கையில், ‘இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் முதல் 10 ஓவர்களில் நன்றாக செயல்பட்டோம். ஆனால் கடைசி 5 ஓவர்களில் சென்னை அணியின் ஸ்கோரை நாங்கள் கட்டுப்படுத்த தவறிவிட்டோம். அதுவே எங்களுக்கு பாதிப்பாக அமைந்தது. டோனிக்கு எதிராக பந்து வீசுவது எங்கள் அணி வீரர்களுக்கு கடினமாக இருந்தது. 6 ஓவர்களுக்கு பிறகு பந்தை சரியான முறையில் பிடித்து பந்து வீசுவதே சிரமமாக இருந்தது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் சிறப்பாக பந்து வீசியதுடன் விக்கெட்டும் வீழ்த்தினார்கள். நாங்கள் பேட்டிங்கில் இன்னும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். கடைசி 3 லீக் ஆட்டங்களிலும் நாங்கள் சிறப்பாக விளையாடினாலும் அதிர்ஷ்டம் இல்லை’ என்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் பந்து வீச வழக்கமான நேரத்தை விட கூடுதல் நேரம் எடுத்து கொண்டதாக எழுந்த புகாரை விசாரித்த போட்டி அமைப்பு குழு அந்த அணியின் கேப்டன் ரஹானேவுக்கு ரூ.12 லட்சத்தை அபராதமாக விதித்துள்ளது.


Next Story