‘கடைசி கட்ட விக்கெட் சரிவை பார்த்து பேச்சே வரவில்லை’ - டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கருத்து


‘கடைசி கட்ட விக்கெட் சரிவை பார்த்து பேச்சே வரவில்லை’ - டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கருத்து
x
தினத்தந்தி 2 April 2019 10:54 PM GMT (Updated: 2 April 2019 10:54 PM GMT)

‘பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி கட்ட விக்கெட் சரிவை பார்த்து பேச்சே வரவில்லை’ என்று டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்தார்.

மொகாலி,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில், மொகாலியில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது. இதில் பஞ்சாப் அணி நிர்ணயித்த 167 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி ஒரு கட்டத்தில் 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 144 ரன்களுடன் வலுவான நிலையில் இருந்தது. இதனால் அந்த அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி கட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, சாம் குர்ரன் ஆகியோரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை கொத்து கொத்தாக இழந்தது. அந்த அணி கடைசி 7 விக்கெட்டுகளை வெறும் 8 ரன்களுக்கு பறிகொடுத்தது. ஐ.பி.எல். வரலாற்றில் மோசமான விக்கெட் சரிவு இதுவாகும். முடிவில் டெல்லி அணி 19.2 ஓவர்களில் 152 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆகி அதிர்ச்சிக்கு உள்ளானது.

பஞ்சாப் அணியை சேர்ந்த 20 வயதான ஆல்-ரவுண்டர் சாம் குர்ரன் (இங்கிலாந்து) தொடக்க ஆட்டக்காரராக களம் கண்டு 20 ரன்கள் எடுத்ததுடன், ‘ஹாட்ரிக்’ சாதனையுடன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அமர்க்களப்படுத்தினார். அதாவது 18-வது ஓவரின் கடைசி பந்தில் ஹர்ஷல் பட்டேல் (0) விக்கெட்டை கபளகரம் செய்த சாம் குர்ரன் 20-வது ஓவரின் முதல் 2 பந்தில் ரபடா (0), சந்தீப் லாமிச்சன்னே (0) ஆகியோரை தொடர்ச்சியாக போல்டு செய்து ஹாட்ரிக் சாதனையாளராக உருவெடுத்தார். இந்த சீசனில் நிகழ்த்தப்பட்ட முதல் ‘ஹாட்ரிக்’ இது தான். ஒட்டுமொத்த ஐ.பி.எல். போட்டியில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்திய 15-வது வீரராக சாதனைப் பட்டியலில் இணைந்தார். மேலும் ஐ.பி.எல்.-ல் இளம் வயதில் ‘ஹாட்ரிக்’ சாதனை புரிந்த வீரர் என்ற பெருமையையும் அவர் வசப்படுத்தினார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற சாம் குர்ரன் கூறுகையில் ‘உண்மையிலேயே ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தது எனக்கு முதலில் தெரியாது. அணி வெற்றி பெற்றதும் சக வீரர் என்னிடம் சொன்ன பிறகே ‘ஹாட்ரிக்’ விவரம் எனக்கு தெரியும்.’ என்று குறிப்பிட்டார்.

தோல்வி குறித்து டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் அளித்த பேட்டியில் ‘பந்துக்கு ஒரு ரன் தேவை என்ற நிலையில் இருந்து நாங்கள் தோல்வியை சந்தித்தது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. கடைசி கட்டத்தில் விக்கெட்டுகள் வீழ்ந்த விதத்தை பார்த்து திக்கித்து போனேன். அப்போது எனக்கு பேச்சே வரவில்லை. நாங்கள் சாதுர்யமான கிரிக்கெட்டை விளையாடவில்லை. அவர்கள் எங்களை ஆட்டத்தின் எல்லா துறைகளிலும் தோற்கடித்து விட்டார்கள். நெருக்கடியான தருணத்தில் பஞ்சாப் அணியினர் பொறுமையாகவும், பதற்றமின்றியும் செயல்பட்டு ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பினார்கள்.

இது போன்ற விக்கெட் வீழ்ச்சி தொடரின் தொடக்கத்தில் நடந்தது ஒருவகையில் நல்லதாக போனது. இதன் மூலம் எங்களது தவறை கண்டுபிடித்து அதனை சரி செய்ய முடியும். போட்டியை வெற்றிகரமாக முடிப்பதில் எங்கள் அணி வீரர்கள் மனஉறுதியுடன் செயல்பட வேண்டியது அவசியமானதாகும்’ என்றார்.


Next Story