சென்னையில் 3 கேலரி அனுமதி பிரச்சினை: ஐ.பி.எல். இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்?


சென்னையில் 3 கேலரி அனுமதி பிரச்சினை: ஐ.பி.எல். இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்?
x
தினத்தந்தி 8 April 2019 11:15 PM GMT (Updated: 8 April 2019 8:11 PM GMT)

சென்னையில் 3 கேலரி அனுமதி பிரச்சினை தொடர்பாக, ஐ.பி.எல். இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம் செய்யப்படுவது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

நடப்பு ஐ.பி.எல். போட்டி தொடரில் லீக் சுற்று அட்டவணை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பிளே-ஆப்’ மற்றும் இறுதிப்போட்டி அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியன் என்பதால் இறுதிப்போட்டி சென்னையில் நடைபெறும் என்று செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் ஐ.பி.எல். ‘பிளே-ஆப்’ மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும் இடம் குறித்து விவாதிக்கப்பட்டது. சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஐ, ஜே மற்றும் கே ஆகிய 3 கேலரிகளுக்கு சீல் வைக்கப்பட்டு இருப்பதால் 12 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட அந்த கேலரிகள் கடந்த 7 வருடங்களாக போட்டியின் போது காலியாக இருந்து வருகிறது. இந்த பிரச்சினையை தீர்க்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு ஒரு வார காலம் அளிப்பது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 3 கேலரிகளுக்கும் அனுமதி பெற்று அதற்கான சான்றிதழை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தாக்கல் செய்யவில்லை என்றால் ஐ.பி.எல். இறுதிப்போட்டியை ஐதராபாத்துக்கு மாற்றுவது என்றும் தகுதி சுற்று மற்றும் வெளியேற்றுதல் சுற்று (பிளே-ஆப்) ஆட்டங்களை பெங்களூருவுக்கு மாற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஐ.பி.எல். போட்டியின் இறுதி கட்டத்தில் பெண்களுக்கான மினி ஐ.பி.எல். போட்டி நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்ளும் 3 அணிகளில் இந்தியா மற்றும் வெளிநாட்டு வீராங்கனைகள் இடம் பெறுகிறார்கள். இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியை விசாகப்பட்டினம், பெங்களூருவில் நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.


Next Story