உலக கோப்பை போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தாக்கத்தை ஏற்படுத்துவார் - யுவராஜ்சிங் கணிப்பு


உலக கோப்பை போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தாக்கத்தை ஏற்படுத்துவார் - யுவராஜ்சிங் கணிப்பு
x
தினத்தந்தி 3 May 2019 11:38 PM GMT (Updated: 4 May 2019 9:07 AM GMT)

உலக கோப்பை போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தாக்கத்தை ஏற்படுத்துவார் என யுவராஜ்சிங் தெரிவித்தார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்-ரவுண்டருமான யுவராஜ்சிங் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

ஹர்திக் பாண்ட்யாவுடன் நேற்று (நேற்று முன்தினம்) நான் உரையாடினேன். அப்போது நான் அவரிடம், இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை போட்டியில் உண்மையிலேயே பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் நீ மிகச்சிறப்பாக செயல்பட வாய்ப்பு இருப்பதாக கூறினேன். அவர் தற்போது பேட்டிங் செய்து வரும் விதத்தை பார்க்கும் போது உச்சத்தில் இருக்கிறார். இதே பார்முடன் அவர் உலக கோப்பை போட்டிக்கும் செல்வார் என்று நம்புகிறேன். பந்து வீச்சில் அவ்வப்போது நன்றாக செயல்படுகிறார். ஆனால் நெருக்கடியை எப்படி கையாளுகிறார் என்பதை பொறுத்தே அவரது ஆட்டம் அமையும்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் பயிற்சி ஆட்டங்கள் முதல் அவரை பார்த்து வருகிறேன். பந்தை நன்றாக அடித்து ஆடுகிறார். இந்த ஐ.பி.எல். தொடர் உனக்கு சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கப்போகிறது என்று ஏற்கனவே நான் அவரிடம் கூறியிருக்கிறேன். கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 4 தரமான பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு 34 பந்துகளில் 91 ரன்கள் விளாசினார். அனேகமாக ஐ.பி.எல்.-ல் நான் பார்த்த சிறந்த இன்னிங்ஸ் இது தான். இவ்வாறு யுவராஜ் கூறினார்.


Next Story