இறுதிப்போட்டிக்கு முன்னேறியது: ‘சென்னை அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்கள் முக்கிய காரணம்’ கேப்டன் டோனி பாராட்டு


இறுதிப்போட்டிக்கு முன்னேறியது: ‘சென்னை அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்கள் முக்கிய காரணம்’ கேப்டன் டோனி பாராட்டு
x
தினத்தந்தி 11 May 2019 11:00 PM GMT (Updated: 11 May 2019 6:55 PM GMT)

‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதற்கு பந்து வீச்சாளர்கள் முக்கிய காரணம்’ என்று அந்த அணியின் கேப்டன் டோனி பாராட்டினார்.

விசாகப்பட்டினம், 

‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதற்கு பந்து வீச்சாளர்கள் முக்கிய காரணம்’ என்று அந்த அணியின் கேப்டன் டோனி பாராட்டினார்.

சென்னை அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் விசாகப்பட்டினத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 2–வது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை விரட்டியடித்து 8–வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஏற்கனவே 2008, 2010, 2011, 2012, 2013, 2015, 2018–ம் ஆண்டுகளில் சென்னை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி கண்டு இருந்தது. தோல்வி அடைந்ததன் மூலம் ஐ.பி.எல். போட்டியில் இறுதிப்போட்டியை எட்டாத ஒரே அணி என்ற சோகம் டெல்லிக்கு தொடருகிறது.

டெல்லி அணி நிர்ணயித்த 148 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டிப்பிடித்தது. சென்னை அணி வீரர் பாப் டுபிளிஸ்சிஸ் (50 ரன்கள், 39 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டநாயகன் விருது பெற்றார்.

பந்து வீச்சாளர்களுக்கு டோனி பாராட்டு

வெற்றிக்கு பிறகு சென்னை அணி கேப்டன் டோனி அளித்த பேட்டியில், ‘விக்கெட்டுகளை வீழ்த்துவது மிகவும் முக்கியமானது. பந்து வீச்சாளர்களுக்கே அனைத்து பாராட்டுகளும் சாரும். இந்த சீசனில் பந்து வீச்சாளர்களால் தான் நாங்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறினோம். இதற்காக பந்து வீச்சாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். சிறிய மைதானமான இதில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு எதிரணி பெரிய ஸ்கோரை எடுக்க முடியாத வகையில் கட்டுப்படுத்தினார்கள். டெல்லி அணி வலுவான பேட்டிங் வரிசையை கொண்டது. அவர்களது விக்கெட்டை எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்திய விதம் பாராட்டுக்குரியது. தொடக்க ஆட்டக்காரர்கள் பாப் டுபிளிஸ்சிஸ், ஷேன் வாட்சன் ஆகியோர் ஆட்டம் அருமையாக இருந்தது. வழக்கம் போல 2–வது தகுதி சுற்று மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளோம். கடந்த ஆண்டு மட்டும் இதற்கு விதி விலக்கு. இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று தெரிவித்தார்.

தோல்வி குறித்து டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கருத்து தெரிவிக்கையில், ‘நாங்கள் எதிர்பார்த்த மாதிரி ரன் எடுக்கவில்லை. பவர்பிளேயில் 2 விக்கெட்டுகளை இழந்து மோசமான தொடக்கம் கண்டோம். அந்த சரிவில் இருந்து மீள்வது கடினமாகி விட்டது. சென்னை அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. நல்ல பார்ட்னர்ஷிப் ஆட்டம் எதுவும் எங்களுக்கு அமையவில்லை. இந்த தோல்வி ஏமாற்றம் அளித்தாலும், ஒட்டுமொத்தத்தில் இந்த சீசனில் நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டோம். இந்த போட்டியில் இருந்து நிறைய பாடம் கற்று இருக்கிறோம். சீனியர் வீரர்களுடன் இணைந்து கேப்டனாக செயல்பட்டது பெருமை அளிக்கிறது’ என்றார்.


Next Story