இந்திய அணியில் கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளரை சேர்த்து இருக்க வேண்டும் - கம்பீர் கருத்து


இந்திய அணியில் கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளரை சேர்த்து இருக்க வேண்டும் - கம்பீர் கருத்து
x
தினத்தந்தி 16 May 2019 11:00 PM GMT (Updated: 16 May 2019 10:03 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளரை சேர்த்து இருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அணியின் முன்னேற்றத்தில் பவுலர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். இந்திய அணியில் தரமான ஒரு வேகப்பந்து வீச்சாளர் குறைவாக இருப்பதாக நான் நினைக்கிறேன். கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளரை சேர்த்து இருக்க வேண்டும். வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர்குமார் ஆகியோருக்கு கூடுதல் ஆதரவு தேவையாகும். வேகப்பந்து வீசக்கூடிய ஆல்-ரவுண்டர்கள் ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர் ஆகியோர் இருக்கிறார்களே? என்று நீங்கள் வாதம் செய்யலாம். அந்த வாதத்தில் நான் சமாதானம் அடையமாட்டேன். இங்கிலாந்து ஆடுகளங்களில் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சு அணியின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும்.

இந்த உலக கோப்பை போட்டியில் ரன் குவிப்பு அதிகமாக இருக்கும். இந்திய அணியின் 4-வது வீரர் வரிசைக்கு லோகேஷ் ராகுல் பொருத்தமானவர். அவர் அந்த வரிசையில் சிறப்பாக செயல்படும் ஆட்ட நுணுக்கம் கொண்டவர். ஆடும் லெவனை அணி நிர்வாகம் தான் முடிவு செய்ய முடியும். ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருக்கிறது. டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித் ஆகியோர் திரும்பி இருப்பதால் அந்த அணி மேலும் வலுப்பெற்றுள்ளது.

இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இந்த போட்டி விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும். இந்த வடிவிலான போட்டி அட்டவணை உண்மையான உலக சாம்பியனை கொடுக்கும். இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வது யார்? என்பதை கணிப்பது கடினம். வரும் உலக கோப்பை போட்டிகள் அனைத்தும் இதே பாணியில் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு கம்பீர் கூறினார்.


Next Story