ரிஷாப் பான்டுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தது ஏன்? - கேப்டன் விராட்கோலி விளக்கம்


ரிஷாப் பான்டுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தது ஏன்? - கேப்டன் விராட்கோலி விளக்கம்
x
தினத்தந்தி 16 May 2019 11:30 PM GMT (Updated: 16 May 2019 10:25 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணிக்கு ரிஷாப் பான்டுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தது ஏன்? என்பதற்கு கேப்டன் விராட்கோலி விளக்கம் அளித்துள்ளார்.

புதுடெல்லி,

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இதில் 2-வது விக்கெட் கீப்பராக 21 வயது இளம் வீரரான ரிஷாப் பான்டுக்கு பதிலாக 33 வயதான தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தது சர்ச்சையானது. ரிஷாப் பான்டுக்கு வாய்ப்பு அளித்து இருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து இருந்தனர். அனுபவத்தின் அடிப்படையில் தினேஷ் கார்த்திக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது என்று தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் பதில் அளித்து இருந்தார்.

இந்த விவகாரம் குறித்து எந்த கருத்தும் சொல்லாமல் மவுனம் காத்து வந்த கேப்டன் விராட்கோலி முதல்முறையாக தனது மவுனத்தை கலைத்து இருக்கிறார். ரிஷாப் பான்டுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை சேர்த்தது ஏன்? என்பது குறித்து விராட்கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டதற்கு அவரது அனுபவமே முக்கிய காரணமாகும். நெருக்கடியான சூழ்நிலையில் அவர் அமைதியாக நிலைத்து நின்று பேட்டிங் செய்யும் திறமை படைத்தவர். இந்த விஷயத்தை தேர்வு குழுவினர் உள்ளிட்ட அனைவரும் ஒப்புக்கொண்டனர்.

தினேஷ் கார்த்திக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. ஒருவேளை டோனிக்கு காயம் ஏற்பட்டு அவர் விளையாட முடியாத சூழ்நிலை உருவானால் தினேஷ் கார்த்திக்கால் விக்கெட் கீப்பிங் பணியை நன்றாக கவனிக்க முடியும். அத்துடன் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கக்கூடிய ஆற்றலும் அவருக்கு இருக்கிறது. இதனை எல்லாம் கருத்தில் கொண்டு தான் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

2004-ம் ஆண்டில் ஒரு நாள் போட்டியில் அறிமுகம் ஆன தினேஷ் கார்த்திக் 91 ஒரு நாள் போட்டியில் விளையாடி 1,738 ரன்கள் எடுத்துள்ளார். 2007-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்த தினேஷ் கார்த்திக் அந்த போட்டியில் ஒரு ஆட்டத்தில் கூட விளையாடவில்லை. தற்போது அவர் 2-வது முறையாக உலக கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளார்.


Next Story