3 நாடுகள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி வங்காளதேச அணி ‘சாம்பியன்’


3 நாடுகள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி வங்காளதேச அணி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 18 May 2019 10:37 PM GMT (Updated: 18 May 2019 10:37 PM GMT)

3 நாடுகள் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வங்காளதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

டப்லின்,

அயர்லாந்து, வங்காளதேசம், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 3 நாடுகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அயர்லாந்தில் நடந்தது. லீக் சுற்றுடன் அயர்லாந்து அணி வெளியேறியது. டப்லினில் நேற்று முன்தினம் நடந்த இறுதிப்போட்டியில் வெஸ்ட்இண்டீஸ்-வங்காளதேசம் அணிகள் மோதின. மழை காரணமாக போட்டி 24 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 24 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் 74 ரன்கள் (64 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன்) எடுத்து ஆட்டம் இழந்தார். சுனில் அம்ரிஸ் 69 ரன்னும், டேரன் பிராவோ 3 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

‘டக்வொர்த் லீவிஸ்’ விதிப்படி வங்காளதேச அணிக்கு 24 ஓவர்களில் 210 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. வங்காளதேச அணி 22.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பல நாடுகள் இடையிலான ஒரு நாள் போட்டியில் வங்காளதேச அணி கோப்பையை வெல்வது இதுவே முதல்முறையாகும். சவுமியா சர்கார் 66 ரன்கள் (41 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழந்தார். மோசாடெக் ஹூசைன் 24 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். வங்காளதேச வீரர் மோசாடெக் ஹூசைன் ஆட்டநாயகன் விருதையும், வெஸ்ட்இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

இந்த போட்டி தொடரில் வெஸ்ட்இண்டீஸ் அணி, வங்காளதேசத்துக்கு எதிரான 3 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ளது. உலக கோப்பை போட்டி நெருங்கும் வேளையில் சந்தித்த இந்த தோல்வியால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


Next Story