பாகிஸ்தானுக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றியது


பாகிஸ்தானுக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றியது
x
தினத்தந்தி 18 May 2019 10:43 PM GMT (Updated: 18 May 2019 10:43 PM GMT)

பாகிஸ்தானுக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

நாட்டிங்காம்,

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடந்தது. பந்து வீச கூடுதல் நேரம் எடுத்து கொண்டதால் ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டதால் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன் ஆடவில்லை. அவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை ஜோஸ் பட்லர் கவனித்தார்.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் குவித்தது. 9-வது சதம் அடித்த பாபர் அஜாம் 115 ரன்னும், முகமது ஹபீஸ் 59 ரன்னும், பஹர் ஜமான் 57 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் டாம் குர்ரன் 4 விக்கெட்டும், மார்க்வுட் 2 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 49.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 341 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 8-வது சதத்தை பூர்த்தி செய்த தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய் 114 ரன்கள் (89 பந்துகளில் 11 பவுண்டரி, 4 சிக்சருடன்) எடுத்து நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தார். மிடில் ஆர்டரில் விக்கெட்டுகள் சரிந்தாலும் பென் ஸ்டோக்ஸ் கடைசி வரை நிலைத்து நின்று 64 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 71 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். பாகிஸ்தான் அணி தரப்பில் இமாத் வாசிம், முகமது ஹஸ்னைன் தலா 2 விக்கெட்டும், ஜூனைத் கான், ஹசன் அலி, சோயிப் மாலிக் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி ஒரு நாள் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. அடுத்த 2 ஆட்டங்களிலும் இங்கிலாந்து அணி முறையே 12 ரன் மற்றும் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது. இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது.

இங்கிலாந்து வீரர் ஜாசன் ராய் ஆட்டநாயகன் விருது பெற்றார். அவர் அளித்த பேட்டியில், ‘எனது மகள் உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருப்பதால் முந்தைய நாள் இரவில் சில மணி நேரங்களே தூங்கினேன். கடினமான தருணத்தில் அடித்த இந்த சதம் மிகவும் உணர்ச்சிகரமானதாகும்’ என்று தெரிவித்தார்.

தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கருத்து தெரிவிக்கையில், ‘நாங்கள் வெற்றிக்கு போதுமான அளவுக்கு ரன்கள் எடுத்தோம். நாங்கள் பீல்டிங்கில் நன்றாக செயல்பட்டு இருந்தால் இந்த போட்டியில் வென்று இருக்கலாம். பீல்டிங் விஷயத்தில் நாங்கள் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக எங்களது பீல்டிங் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால் இந்த போட்டி தொடரில் எங்களது பீல்டிங் சரியாக அமையவில்லை’ என்றார்.


Next Story