சொந்த மண்ணில் சோபிக்க தவறிய இந்தியா (1987)


சொந்த மண்ணில் சோபிக்க தவறிய இந்தியா (1987)
x
தினத்தந்தி 18 May 2019 11:15 PM GMT (Updated: 18 May 2019 11:03 PM GMT)

1987-ல் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது.


4-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தானில் (1987-ம் ஆண்டு அக்டோபர் 8-ந் தேதி முதல் நவம்பர் 8-ந் தேதி வரை) நடந்தது. கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்துக்கு வெளியே அரங்கேறிய முதல் உலக கோப்பை போட்டி இதுவாகும். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆதிக்க சக்திகளாக இருந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆசிய கண்டத்தில் உலக கோப்பையை நடத்த எதிர்ப்பு காட்டின. பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது பிடிவாதத்தை தளர்த்தி இந்த போட்டிக்கு அனுமதி அளித்தது. இதுவே உலக கோப்பை போட்டி சுழற்சி முறையில் வெவ்வேறு நாடுகளில் நடக்கவும் வழிவகுத்தது எனலாம்.

போட்டி 60 ஓவரில் இருந்து தற்போது நடைமுறையில் இருக்கும் 50 ஓவர்களாக மாற்றம் செய்யப்பட்டது. முந்தைய உலக கோப்பை போட்டியில் கலந்து கொண்ட 8 அணிகள் இந்த முறையும் பங்கேற்றன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே அணிகளும், ‘பி’ பிரிவில் பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், இலங்கை அணிகளும் இடம் பெற்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

கபில்தேவ் தலைமையில் களம் கண்ட நடப்பு சாம்பியனான இந்திய அணி முதலாவது லீக் ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டாலும், அடுத்த ஆட்டங்களில் 16 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தையும், 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயையும், 56 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவையும், 7 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயையும், 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தையும் அடுத்தடுத்து வீழ்த்தியது. லீக் முடிவில் இந்தியா (5 வெற்றி, ஒரு தோல்வி), ஆஸ்திரேலியா (5 வெற்றி, ஒரு தோல்வி), பாகிஸ்தான் (5 வெற்றி, ஒரு தோல்வி), இங்கிலாந்து (4 வெற்றி, 2 தோல்வி) அரைஇறுதிக்குள் நுழைந்தன. 2 முறை சாம்பியனான வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் முறையாக லீக் சுற்றுடன் மூட்டையை கட்டியது.

அரைஇறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா 18 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், இங்கிலாந்து 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின. கடந்த உலக கோப்பை போட்டி அரைஇறுதியில் இந்திய அணியிடம் கண்ட தோல்விக்கு இங்கிலாந்து பதிலடி கொடுத்ததுடன், இந்திய அணி 2-வது முறையாக உலக கோப்பையை வெல்லும் முயற்சிக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. போட்டியை நடத்திய இரு நாடுகளும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாதது இரண்டு நாட்டு ரசிகர்களுக்கும் பெருத்த ஏமாற்றமாய் அமைந்தது. இங்கிலாந்து அணி, இந்திய அணியின் இறுதிப்போட்டி வாய்ப்பை வதம் செய்ததால், இறுதிப்போட்டியின் போது இந்திய ரசிகர்கள் அனைவரும் ஆஸ்திரேலிய அணிக்கு ஆதரவாக ஆர்ப்பரித்தனர்.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் சுமார் 1 லட்சம் ரசிகர்களுக்கு மத்தியில் நடந்த இறுதி யுத்தத்தில் ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 7 ரன் வித்தியாசத்தில் தனது பரம எதிரியான இங்கிலாந்தை வீழ்த்தி உலக கோப்பையை முதல் முறையாக வென்று ஆச்சரியப்படுத்தியது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 246 ரன்களே எடுத்து தோல்வியை சந்தித்தது. கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றிக்கு 17 ரன் தேவைப்பட்டது. ஆனால் அந்த ஓவரில் இங்கிலாந்து அணியால் 10 ரன்களே சேர்க்க முடிந்தது. 75 ரன் எடுத்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் பூன் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த போட்டி தொடரில் இங்கிலாந்து வீரர் கிரகாம் கூச் அதிக ரன்னும் (471 ரன்கள்), ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கிரேக் மெக்டர்மோட் அதிக விக்கெட்டும் (18 விக்கெட்) எடுத்தனர்.

முதல் ‘ஹாட்ரிக்’ சாதனை

உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ‘ஹாட்ரிக்’ விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் சேத்தன் ஷர்மா பெற்றார். இந்த உலக கோப்பை போட்டியில் நாக்பூரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் 42-வது ஓவரில் அவர் ரூதர் போர்டு, இயான் சுமித், இவான் சாட்பீல்டு ஆகிய வீரர்களின் விக்கெட்டை தொடர்ச்சியாக வீழ்த்தினார். அவர் 3 பேரையும் போல்டு ஆக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆமை வேக ஆட்டக்காரர் என்று வர்ணிக்கப்படும் சுனில் கவாஸ்கர் இந்த லீக் ஆட்டத்தில் அதிரடியாக ஆடி 88 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 103 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஒரு நாள் போட்டியில் கவாஸ்கர் அடித்த முதல் மற்றும் கடைசி சதமாக இது அமைந்தது. இந்த உலக கோப்பை போட்டியுடன் கவாஸ்கர் கிரிக்கெட் ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.



Next Story