உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி வீரர்கள் மனைவி, குடும்ப உறுப்பினர்களை அழைத்து செல்ல தடை


உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி வீரர்கள் மனைவி, குடும்ப உறுப்பினர்களை அழைத்து செல்ல தடை
x
தினத்தந்தி 24 May 2019 11:14 PM GMT (Updated: 24 May 2019 11:14 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி வீரர்கள் தங்களது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களை அழைத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கராச்சி,

10 அணிகள் இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி வீரர்கள் தங்களுடன் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களை அழைத்து செல்ல பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைப்படி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது வீரர்களுடன் அவர்களது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களை அழைத்து செல்லக்கூடாது. அப்படி குடும்ப உறுப்பினர்கள் செல்ல விரும்பினால் அவர்கள் தங்களது சொந்த செலவில் தான் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்.

மேலும் வீரர்களின் குடும்பத்தினர் தனியாக சென்றாலும் வீரர்களுடன் இணைந்து ஒரே அறையில் தங்க முடியாது. பாகிஸ்தான் அணி வீரர்களில் ஹாரிஸ் சோகைலுக்கு மட்டும் தனிப்பட்ட காரணத்துக்காக இந்த விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை போட்டியின் போது வீரர்களுடன் குடும்ப உறுப்பினர்கள் தங்கினால் அவர்களது கவனம் சிதறலாம் என்று கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Next Story