ராணுவ முத்திரை பதித்த கையுறையை பயன்படுத்த டோனிக்கு அனுமதி இல்லை - இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்தது, ஐ.சி.சி.


ராணுவ முத்திரை பதித்த கையுறையை பயன்படுத்த டோனிக்கு அனுமதி இல்லை - இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்தது, ஐ.சி.சி.
x
தினத்தந்தி 7 Jun 2019 11:15 PM GMT (Updated: 7 Jun 2019 11:12 PM GMT)

ராணுவ முத்திரை பதித்த விக்கெட் கீப்பிங் கையுறையுடன் டோனி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் விடுத்த கோரிக்கையை ஐ.சி.சி. நிராகரித்துள்ளது.

லண்டன்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனி ராணுவ முத்திரை பதித்த விக்கெட் கீப்பிங் கையுறையுடன் விளையாடியது சலசலப்பை உருவாக்கியுள்ளது. இந்திய ராணுவத்தில் கவுரவ பதவி வகிக்கும் டோனி துணை ராணுவ சிறப்பு படையினரின் ‘பாலிதான்’ (தியாகத்தை குறிக்கும் அடையாளம்) என்ற முத்திரையை தனது கையுறையில் (குளோவ்ஸ்) பதித்து இருந்தார்.

இதுபோன்ற முத்திரையை பயன்படுத்துவது ஆட்ட விதிமுறைக்கு புறம்பானதாகும். எனவே ராணுவ முத்திரையை அடுத்த ஆட்டத்துக்குள் டோனி அகற்ற வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தது.

இந்த நிலையில் ரசிகர்கள் மட்டுமின்றி, இந்திய கிரிக்கெட் வாரியமும் டோனிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் கூறுகையில் ‘டோனி விக்கெட் கீப்பிங் கையுறையில் பதித்துள்ள முத்திரையுடன் உலக கோப்பை போட்டியில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று ஏற்கனவே நாங்கள் முறைப்படி ஐ.சி.சி.க்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறோம். ஐ.சி.சி. விதிமுறைப்படி வீரர்கள் தனிப்பட்ட வர்த்தகம், மதம் மற்றும் இனம் சார்ந்த லோகோவைத் தான் பயன்படுத்தக்கூடாது. ஆனால் டோனி பயன்படுத்துவது அது சார்ந்தது இல்லை என்பது எங்களுக்கு தெரியும். முத்திரையை அகற்ற வேண்டும் என்று ஐ.சி.சி. எங்களுக்கு வேண்டுகோள் தான் விடுத்து இருக்கிறது. அறிவுறுத்தல் எதுவும் சொல்லவில்லை. அடுத்த ஆட்டத்திற்கு (நாளை நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான) முன்பாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, ஐ.சி.சி. சீனியர் நிர்வாகிகளை சந்தித்து இது குறித்து பேசுவார்’ என்றார்.

மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரென் ரிஜிஜூவும் டோனிக்கு ஆதரவுகரம் நீட்டியுள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘இந்த பிரச்சினை நாட்டு மக்களின் உணர்வுடன் தொடர்புடையதாகும். நாட்டின் நலனை மனதில் கொள்ள வேண்டும். டோனி விஷயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் நியாயமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் உள்பட பலரும் டோனிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

அதே சமயம் பாகிஸ்தான் மந்திரி பவாத் சவுத்ரி டோனிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘கிரிக்கெட் விளையாட தான் டோனி இங்கிலாந்து சென்றுள்ளார். அவர் ஒன்றும் மகாபாரத போருக்கு போகவில்லை. இந்த விஷயத்தை இந்திய மீடியாக்கள் முட்டாள்தனமாக விவாதித்து கொண்டு இருக்கின்றன. போரை பற்றி கவலைப்படும் சில இந்திய ஊடகங்கள் டோனியை ராணுவ வீரராக்கி அவரை சிரியா, ஆப்கானிஸ்தான் அல்லது ருவாண்டாவுக்கு அனுப்பி வையுங்கள்’ என்று சாடியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களும் இதற்கு பதிலடி கொடுக்கும் எண்ணத்தில் உள்ளனர். மான்செஸ்டரில் வருகிற 16-ந் தேதி நடக்கும் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தும் போதும் வித்தியாசமான முறையில் களத்தில் கொண்டாட பாகிஸ்தான் அணியினர் திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆனால் அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுமதி அளிக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐ.சி.சி. நேற்றிரவு நிராகரித்து விட்டது. “ஐ.சி.சி. போட்டிகளுக்குரிய விதிமுறையின்படி தனிப்பட்ட சின்னத்தையோ (லோகோ) அல்லது குறிப்பிட்ட தகவலை வெளிப்படுத்தும் வகையிலேயோ அவற்றை வீரர்களின் சீருடையிலோ அல்லது விளையாட்டு உபகரணங்களிலோ பயன்படுத்துவதற்கு அனுமதி கிடையாது. அது மட்டுமின்றி இந்த லோகோ விக்கெட் கீப்பர்களின் கையுறையில் என்னென்ன இடம் பெற வேண்டும் என்ற விதிகளுக்கு எதிரானது” என்று ஐ.சி.சி. தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்து வரும் போட்டியில் டோனி இந்த முத்திரை இல்லாத சாதாரண கையுறையையே பயன்படுத்துவார் என்று தெரிகிறது.


Next Story