இந்தியா-நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து


இந்தியா-நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து
x
தினத்தந்தி 13 Jun 2019 10:45 PM GMT (Updated: 13 Jun 2019 8:55 PM GMT)

நாட்டிங்காம்,


உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

மழையால் பாதிப்பு

10 அணிகள் இடையிலான 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

தொடரின் 18-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு நாட்டிங்காமில் மோதுவதாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்தது போலவே நாட்டிங்காமில் மழை வெளுத்து வாங்கியது. ‘டாஸ்’ போடுவதற்கு முன்பே மழை புகுந்து விளையாடியதால் வீரர்களும், குழுமியிருந்த ரசிகர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து பெய்த மழையால் மைதானத்தில் தண்ணீர் தேங்கியது. 5½ மணி நேர காத்திருப்புக்கு பிறகு மறுபடியும் ஆய்வு செய்த நடுவர்கள், விளையாடுவதற்கு உகந்த வகையில் மைதானம் இல்லை என்று கூறி இந்த ஆட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.

இதையடுத்து இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை பகிர்ந்து கொண்டன. நடப்பு தொடரில் மழையால் ரத்தான 4-வது ஆட்டம் இதுவாகும். ஏற்கனவே பாகிஸ்தான்-இலங்கை, வெஸ்ட் இண்டீஸ்-தென்ஆப்பிரிக்கா, இலங்கை-வங்காளதேசம் அணிகள் இடையிலான ஆட்டமும் மழையால் கைவிடப்பட்டது. இதற்கு முன்பு உலக கோப்பை தொடர்களில் 2 ஆட்டத்திற்கு மேல் ரத்தானதில்லை. ஆனால் இந்த முறை மழையின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

கோலி சொல்வது என்ன?

பின்னர் இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘அவுட் பீல்டு விளையாடுவதற்கு ஏற்ற வகையில் இல்லாத நிலையில் போட்டியை கைவிட்டிருப்பது சாதுர்யமான முடிவு. எப்போதும் வீரர்களின் பாதுகாப்பு முக்கியம். இல்லாவிட்டால் வீரர்களுக்கு காயம் தான் ஏற்படும். இரு அணிகளும் இதுவரை ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற நிலையில், புள்ளியை பகிர்ந்து கொள்வது மோசமானது அல்ல.

அடுத்து நாங்கள் பாகிஸ்தான் அணியை ஞாயிற்றுக்கிழமை சந்திக்க உள்ளோம். அப்போது எத்தகைய மனநிலையுடன் இருப்போம் என்பதை அறிவோம். இந்த ஆட்டத்தை மையமாக வைத்து உணர்வுபூர்வமான ஒரு சூழல் நிலவுவதால், முதல்முறையாக உலக கோப்பையில் ஆடும் வீரர்களுக்கு நெருக்கடி உருவாகலாம். ஆனால் களத்திற்கு வந்து விட்டால் எல்லாமே அமைதியாகி விடும். களம் இறங்கி வியூகங்களை கச்சிதமாக செயல்படுத்துவதில் கவனம் செலுத்துவோம். இது போன்ற மிகப்பெரிய ஆட்டத்தில் விளையாடுவது மிகப்பெரிய கவுரவமாகும். இத்தகைய ஆட்டங்கள் எங்களது முழு திறமையை வெளிக்கொண்டு வரும்.

கைவிரலில் காயமடைந்துள்ள ஷிகர் தவான் ஓரிரு வாரங்கள் விரலில் கட்டுடன் இருப்பார். விரைவில் அவர் குணமடைந்து, லீக் சுற்றின் கடைசி கட்டத்திலும், அரைஇறுதியிலும் ஆடுவார் என்று நம்புகிறேன்’ என்றார்.

வில்லியம்சன் கருத்து

நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறுகையில், ‘இங்கு நாங்கள் 4 நாட்களாக சூரியனையே பார்க்கவில்லை. அதனால் இந்த முடிவு எங்களுக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. அடுத்த ஆட்டத்திற்கு முன்பாக கிடைக்கும் சில நாள் ஓய்வு, புத்துணர்ச்சியுடன் தயாராகுவதற்கு நல்ல வாய்ப்பாகும். அடுத்த லீக்கில் தென்ஆப்பிரிக்காவை (19-ந்தேதி) எதிர்கொள்கிறோம். தென்ஆப்பிரிக்கா சிறந்த அணி. நாங்கள் அவர்களுக்கு எதிராக விளையாடும் ஒவ்வொரு முறையும் கூடுதல் சவால் அளித்திருக்கிறார்கள் என்பதை அறிவோம். சவாலை சந்திக்க தயாராக இருப்போம்’ என்றார்.

Next Story