வெற்றி வரலாறு தொடருமா? - பாகிஸ்தான் அணியை இன்று சந்திக்கிறது, இந்தியா


வெற்றி வரலாறு தொடருமா? - பாகிஸ்தான் அணியை இன்று சந்திக்கிறது, இந்தியா
x
தினத்தந்தி 16 Jun 2019 12:32 AM GMT (Updated: 16 Jun 2019 12:32 AM GMT)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய அணி இன்று பாகிஸ்தானுடன் கோதாவில் இறங்குகிறது.

மான்செஸ்டர்,

இங்கிலாந்தில் நடந்து வரும் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த உலக கோப்பையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், பேராவலையும் உருவாக்கி இருக்கும் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டு மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரங்கேறுகிறது.

கிரிக்கெட்டில் இந்தியா- பாகிஸ்தான் மோதல் என்றாலே அனல் பறக்கும். அதுவும் இது உலக கோப்பை என்பதால் சொல்லவே வேண்டாம். உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த ஆட்டத்தை காண தவம் கிடக்கிறார்கள். தங்களுக்கு இது சாதாரண ஆட்டம் என்று வீரர்கள் வெளிப்படையாக சொன்னாலும், தனித்துவம் வாய்ந்த ஒரு போட்டி என்பதை அவர்களது மனம் அறியும். இரு நாட்டு பகைமை காரணமாக ரசிகர்களும் இந்த போட்டியை ஒரு யுத்தம் போன்று உணர்வுபூர்வமாக பாவிப்பதால், அனைவரது கவனமும் இந்த ஆட்டத்தின் மீது பதிந்து இருக்கிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பலம் வாய்ந்த தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளை சாய்த்தது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

இதுவரை தோல்வியே சந்திக்காமல் 5 புள்ளிகளுடன் உள்ள இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் வலுவாக உள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் விரலில் காயமடைந்திருப்பதால் அவருக்கு பதிலாக லோகேஷ் ராகுல் தொடக்க ஆட்டக்காரராக ஆடுவார். மிடில் வரிசையில் விஜய் சங்கர் அல்லது தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவருக்கு இடம் கிடைக்கும். பேட்டிங்கில் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரைத் தான் அணி இப்போது அதிகம் சார்ந்து இருக்கிறது. இவர்கள் நிலைத்து நின்று நீண்ட நேரம் ஆடினால் சவாலான ஸ்கோரை எட்ட முடியும்.

இந்த ஆடுகளத்தில் புற்கள் அதிகமாக இல்லை. பேட்டிங்குக்கு ஏற்ற வகையிலேயே ஆடுகளம் காணப்படுகிறது. ஆனால் மோசமான வானிலை உருவானால், தொடக்கத்தில் பந்து நன்கு ஸ்விங் ஆகி வேகப்பந்து வீச்சு எடுபடலாம். அது மட்டுமின்றி பாகிஸ்தான் வீரர்கள் சுழற்பந்து வீச்சை எளிதில் சமாளிக்கக்கூடியவர்கள். அதனால் குல்தீப் யாதவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை சேர்ப்பது குறித்து இந்திய அணி நிர்வாகம் யோசித்து வருகிறது. பாகிஸ்தான் அணியில் 3 இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ள நிலையில் அவர்களை சாதுர்யமாக எதிர்கொள்வதற்கு இந்திய அணியில் பிரதான ஒரு இடக்கை பேட்ஸ்மேன் கூட இல்லாதது சற்று பலவீனமாகும். ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் சொன்னது போல் இந்திய வீரர்கள் களத்தில் ஆக்ரோஷமாக விளையாட வேண்டியது முக்கியமாகும்.

மேலும், வரலாறு நம்பக்கம் தான் இருக்கிறது. உலக கோப்பை கிரிக்கெட் புத்தகத்தை புரட்டிப்பார்த்தால், இந்தியஅணி இதுவரை பாகிஸ்தானிடம் ஒரு முறை கூட தோற்றது கிடையாது. சந்தித்த 6 ஆட்டங்களிலும் வாகை சூடியிருக்கிறது. அந்த பெருமையை தக்க வைக்கும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.

சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி (இங்கிலாந்துக்கு எதிராக), 2 தோல்வி (வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக), ஒரு முடிவில்லை (இலங்கைக்கு எதிராக) என்று 4 புள்ளிகள் பெற்றுள்ளது. பாகிஸ்தானை எப்போதும் கணிக்க முடியாத அணி என்று வர்ணிப்பார்கள். அது இந்த உலக கோப்பையிலும் ஏற்கனவே நிரூபணமாகி விட்டது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான லீக்கில் 105 ரன்னில் சுருண்ட பாகிஸ்தான், ‘நம்பர் ஒன்’ அணியான இங்கிலாந்துக்கு எதிராக 348 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது.

உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை இதுவரை வீழ்த்தியதில்லை என்ற நீண்டகால சோகத்துக்கு இந்த தடவை முடிவு கட்டியே தீர வேண்டும் என்ற வெறியுடன் பாகிஸ்தான் வீரர்கள் வரிந்து கட்டுவார்கள். இமாம் உல்-ஹக், பஹார் ஜமான், பாபர் அசாம் ஆகியோர் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் தூண்கள். பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது அமிர், வஹாப் ரியாஸ், ஹசன் அலி, ஷகீன் அப்ரிடி உள்ளிட்டோர் மிரட்டக்கூடியவர்கள். இவர்களுடன் அனுபவம் வாய்ந்த முகமது ஹபீஸ், சோயிப் மாலிக் பக்கபலமாக உள்ளனர். எனவே இந்த ஆட்டத்தில் முதல் பந்தில் இருந்து கடைசி வரை சுவாரஸ்யத்துக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது என்று நம்பலாம்.

சமீபத்திய செயல்பாடு, திறமை அடிப்படையில் பார்த்தால் இந்தியாவின் கையே கொஞ்சம் ஓங்கி நிற்கிறது. ஆனால் உச்சக்கட்ட நெருக்கடியை எந்த அணி நேர்த்தியாக கையாளுகிறதோ அவர்களிடமே வெற்றி வசமாகும்.

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 131 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 54-ல் இந்தியாவும், 73-ல் பாகிஸ்தானும் வெற்றி கண்டுள்ளன. 4 ஆட்டத்தில் முடிவு இல்லை. கடைசியாக இவ்விரு அணிகளும் கடந்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் மோதிய இரு ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), விஜய் சங்கர் அல்லது தினேஷ் கார்த்திக், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், பும்ரா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ் அல்லது முகமது ஷமி.

பாகிஸ்தான்: இமாம் உல்-ஹக், பஹார் ஜமான், பாபர் அசாம், முகமது ஹபீஸ், சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), சோயிப் மாலிக் அல்லது ஆசிப் அலி, ஷதப் கான், ஹசன் அலி அல்லது ஹாரிஸ் சோகைல், வஹாப் ரியாஸ், முகமது அமிர், ஷகீன் ஷா அப்ரிடி.

‘முழுதிறமையை வெளிப்படுத்தினால் எந்த அணியையும் வீழ்த்த முடியும்’ - கோலி

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் பாகிஸ்தான் ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு, உச்சபட்ச நெருக்கடி உள்ளிட்டவை குறித்து 6-7 கேள்விகள் ஒரே மாதிரியாக கேட்கப்பட்டது. அதற்கு விராட் கோலி சாதுர்யமாக பதில் அளித்து கூறியதாவது:-

ரசிகர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள், இது மற்றொரு கிரிக்கெட் ஆட்டம். உற்சாகமாக கண்டுகளியுங்கள் என்பது தான். மற்ற ஆட்டங்களை விட இது சிறப்பு வாய்ந்த அல்லது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டம் என்று எங்களுக்கு எதுவும் கிடையாது. எந்த எதிரணி என்றாலும் ஒரே மாதிரியாக கவனம் செலுத்துவது ஒவ்வொரு வீரர்களுக்குரிய பொறுப்பு ஆகும். நாளைய ஆட்டம் (இன்று) குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கி குறிப்பிட்ட நேரத்தில் முடிந்து விடப்போகிறது. வெற்றி பெற்றாலும், தோற்றாலும் இத்துடன் உலக கோப்பை போட்டி முடிந்து விடப்போவதில்லை. அதன் பிறகும் போட்டிகள் இருக்கின்றன. இத்தகைய ஆட்டத்தை இது மாதிரி அணுகுவது தான் சாலச்சிறந்தது.

பாகிஸ்தான் அணியில் நிறைய திறமையான வீரர்கள் இருப்பதை அறிவோம். ஆனால் ஒரு அணியாக நாங்கள் முழு திறமையை வெளிப்படுத்தினால் உலகின் எந்த அணியையும் தோற்கடிக்க முடியும்.

எதிரணி பற்றி அதிகம் சிந்திக்காமல் களத்தில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவது அவசியமாகும். சீதோஷ்ண நிலைக்கு தக்கபடி ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வோம். இவ்வாறு கோலி கூறினார்.

மைதான கண்ணோட்டம்

பழமையான மைதானங்களில் ஒன்றான மான்செஸ்டரில் இதுவரை 46 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இங்கிலாந்து அணி 38 ஆட்டங்களில் 25-ல் வெற்றியும், 12-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. இங்கு இந்திய அணி 8 ஆட்டங்களில் பங்கேற்று அதில் 3-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. இதில் 1999-ம் ஆண்டு உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை 47 ரன் வித்தியாசத்தில் உதைத்ததும் அடங்கும்.

பாகிஸ்தான் அணி இங்கு 8 ஆட்டங்களில் ஆடி 2-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும் கண்டுள்ளது. 3 முறை 300 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டுள்ளன. இலங்கை அணி 2006-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 7 விக்கெட்டுக்கு 318 ரன்கள் எடுத்தது ஒரு அணியின் அதிகபட்சமாகும். 4 அணிகள் 100 ரன்னுக்குள் சுருண்டுள்ளன. இதில் கனடா 1979-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 45 ரன்னில் ஆல்-அவுட் ஆனது, இந்த மைதானத்தில் ஒரு அணியின் குறைந்தபட்சமாகும். ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த அணிகள் 40 சதவீதமும், இலக்கை நோக்கி 2-வது பேட்டிங் செய்த அணிகள் 60 சதவீதமும் வெற்றி பெற்று இருக்கின்றன.

மழை வாய்ப்பு எப்படி?

இந்த உலக கோப்பை கிரிக்கெட்டை பொறுத்தவரை மழையின் குறுக்கீடு ரசிகர்களின் ஆர்வத்தை குறைத்து விட்டது. இதுவரை 4 ஆட்டங்கள் மழையால் ரத்தாகியுள்ளன. இந்தியா-பாகிஸ்தான் மல்லுகட்டும் மான்செஸ்டரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்துள்ளது. ஆடுகளமும் மூடியே வைக்கப்பட்டுள்ளது. இன்றைய வானிலையை பொறுத்தவரை மழை வாய்ப்பு கொஞ்சம் குறைவு தான். அங்கு பிற்பகலில் லேசான மழை பெய்யலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.


Next Story