ஆப்கானிஸ்தானை கதறடித்து இங்கிலாந்து அணி 4-வது வெற்றி மோர்கன் சதம் அடித்தார்


ஆப்கானிஸ்தானை கதறடித்து இங்கிலாந்து அணி 4-வது வெற்றி மோர்கன் சதம் அடித்தார்
x
தினத்தந்தி 18 Jun 2019 11:00 PM GMT (Updated: 18 Jun 2019 8:42 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானை கதறடித்த இங்கிலாந்து அணி ‘மெகா’ வெற்றியை ருசித்தது. மோர்கன் 17 சிக்சருடன் 148 ரன்கள் குவித்து மிரட்டினார்.

மான்செஸ்டர், 

உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானை கதறடித்த இங்கிலாந்து அணி ‘மெகா’ வெற்றியை ருசித்தது. மோர்கன் 17 சிக்சருடன் 148 ரன்கள் குவித்து மிரட்டினார்.

பேர்ஸ்டோ 90 ரன்

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த நிலையில் மான்செஸ்டரில் நேற்று அரங்கேறிய 24-வது லீக் ஆட்டத்தில் போட்டியை நடத்திய இங்கிலாந்து அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. இங்கிலாந்து அணியில் ஜாசன் ராய், பிளங்கெட் ஆகியோருக்கு பதிலாக ஜேம்ஸ் வின்ஸ், மொயீன் அலி சேர்க்கப்பட்டனர்.

டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் மோர்கன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து ஜானி பேர்ஸ்டோவும், ஜேம்ஸ் வின்சும் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 44 ரன்கள் எடுத்து பிரிந்தது. வின்ஸ் 26 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து ஜோ ரூட் ஆட வந்தார். மறுமுனையில் ரன்ரேட்டை அதிகப்படுத்துவதில் கவனம் செலுத்திய பேர்ஸ்டோ சதத்தை நெருங்கிய நிலையில் 90 ரன்களில் (99 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டம் இழந்தார்.

மோர்கன் கலக்கல்

பின்னர் கேப்டன் இயான் மோர்கன் வந்தார். இதன் பிறகு தான் உண்மையிலேயே ஆட்டம் சூடுபிடித்தது. எதிரணி கேப்டன் குல்படி நைப்பின் பந்து வீச்சில் தொடர்ந்து 2 சிக்சர் அடித்து ரன்வேட்டையை ஆரம்பித்த மோர்கன் 28 ரன்களில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பி பிழைத்தார். இந்த பொன்னான வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு விசுவரூபம் எடுத்த மோர்கன், ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான், முகமது நபி, முஜீப்ரகுமான் ஆகியோரின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். அடிக்கடி பந்தை எல்லைக்கோட்டிற்கு தெறிக்கவிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்திய மோர்கன், ரஷித்கானின் ஒரே ஓவரில் 3 சிக்சர் பறக்க விட்டு தனது 13-வது சதத்தை 57 பந்துகளிலேயே நிறைவு செய்தார். ஜோ ரூட் 45 ரன்னில் இருந்த போது களம் கண்ட மோர்கன் சிறிது நேரத்திலேயே அவரை முந்தி ஆச்சரியப்படுத்தினார்.

மோர்கனின் வாணவேடிக்கையால் இங்கிலாந்தின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறியது. ஸ்கோர் 353 ரன்களாக உயர்ந்த போது ஜோ ரூட் 88 ரன்களில் (82 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். ரூட்-மோர்கன் கூட்டணி 3-வது விக்கெட்டுக்கு 189 ரன்கள் திரட்டியது. உலக கோப்பை கிரிக்கெட்டில் ஒரு விக்கெட்டுக்கு இங்கிலாந்து ஜோடி எடுத்த அதிகபட்சம் இது தான். அதே ஓவரில் மோர்கனும் (148 ரன், 71 பந்து, 4 பவுண்டரி, 17 சிக்சர்) வெளியேறினார். ஒரு நாள் போட்டியில் மோர்கனின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதன் பிறகு கடைசி இரு ஓவர்களில் மொயீன் அலி 4 சிக்சர் அடித்து அட்டகாசப்படுத்தினார்.

397 ரன்கள் குவிப்பு

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் குவித்தது. கடைசி 10 ஓவர்களில் மட்டும் 142 ரன்கள் சேகரித்தனர். மொயீன் அலி 31 ரன்களுடன் (9 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார்.

உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு இதே உலக கோப்பையில் வங்காளதேசத்திற்கு எதிராக 6 விக்கெட்டுக்கு 386 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அது மட்டுமின்றி இந்த மைதானத்தின் சிறந்த ஸ்கோராகவும் இது பதிவானது.

இங்கிலாந்து வெற்றி

அடுத்து ஆப்கானிஸ்தான் அணி இமாலய இலக்கை நோக்கி விளையாடியது. போதிய அனுபவம் இல்லாத அந்த அணி வீரர்கள் இந்த ஸ்கோரை நெருங்குவது சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்து ஏதோ பயிற்சி எடுப்பது போல் ஆடினர். 50 ஓவர் முழுமையாக தாக்குப்பிடித்த ஆப்கானிஸ்தான் 8 விக்கெட்டுக்கு 247 ரன்களே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து பீல்டர்கள் 3-4 கேட்சுகளை நழுவ விட்டனர். இல்லாவிட்டால் ஆப்கானிஸ்தான் அணி ஆல்-அவுட் ஆகியிருக்கும். அந்த அணியில் அதிகபட்சமாக ஹஸ்மத்துல்லா ஷகிடி 76 ரன்கள் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். மோர்கன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

5-வது லீக்கில் ஆடிய இங்கிலாந்து அணிக்கு இது 4-வது வெற்றியாகும். இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத ஆப்கானிஸ்தான் சந்தித்த 5-வது தோல்வியாகும்.

சிக்சரில் இங்கிலாந்து புதிய உச்சம்

* இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி மொத்தம் 25 சிக்சர்களை அடித்து தூள் கிளப்பியது. இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் விளாசிய அணி என்ற தனது முந்தைய உலக சாதனையை இங்கிலாந்து மாற்றி அமைத்தது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் செயின்ட்ஜார்ஜில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 24 சிக்சர்கள் அடித்திருந்தது.

* இங்கிலாந்து கேப்டன் மோர்கன் இந்த உலக கோப்பையில் இதுவரை 22 சிக்சர்கள் (5 ஆட்டம்) அடித்திருக்கிறார். இன்னும் 5 சிக்சர் எடுத்தால், ஒரு உலக கோப்பையில் அதிக சிக்சர் நொறுக்கிய வீரர் என்ற மகிமையை பெறுவார். இந்த வகையில் 2015-ம் ஆண்டு உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் 26 சிக்சர் எடுத்ததே அதிகபட்சமாக நீடிக்கிறது.

* ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் மொத்தம் 11 சிக்சர்களை விட்டுக்கொடுத்துள்ளார். ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர் களை தாரை வார்த்த பவுலர் இவர் தான்.

* இங்கிலாந்து கேப்டன் மோர்கன் ரஷித்கானின் பந்து வீச்சில் மட்டும் 7 முறை பந்தை சிக்சருக்கு அனுப்பியிருக்கிறார். ஒரு நாள் போட்டி ஆட்டம் ஒன்றில் குறிப்பிட்ட பவுலரின் ஓவரில் அதிக சிக்சர் அடித்த பேட்ஸ்மேனாகவும் மோர்கன் வலம் வருகிறார்.

Next Story