17 சிக்சர் அடித்து உலக சாதனை: இதுபோன்று அதிரடியாக ஆடுவேன் என்று நினைத்து பார்க்கவில்லை இயான் மோர்கன் சொல்கிறார்


17 சிக்சர் அடித்து உலக சாதனை: இதுபோன்று அதிரடியாக ஆடுவேன் என்று நினைத்து பார்க்கவில்லை இயான் மோர்கன் சொல்கிறார்
x
தினத்தந்தி 19 Jun 2019 10:30 PM GMT (Updated: 19 Jun 2019 9:54 PM GMT)

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் மான்செஸ்டரில் நேற்று முன்தினம் நடந்த 24–வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்து 4–வது வெற்றியை ருசித்தது.

மான்செஸ்டர், 

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் மான்செஸ்டரில் நேற்று முன்தினம் நடந்த 24–வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்து 4–வது வெற்றியை ருசித்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் குவித்தது. கேப்டன் இயான் மோர்கன் 71 பந்துகளில் 4 பவுண்டரி, 17 சிக்சருடன் 148 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டியில் ஒரு இன்னிங்சில் 17 சிக்சர் விளாசி இயான் மோர்கன் புதிய உலக சாதனை படைத்தார். பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது.

வெற்றிக்கு பிறகு இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் அளித்த பேட்டியில், ‘இதுபோன்று அதிரடியாக ஆடுவேன் என்று நான் ஒருபோதும் நினைத்து பார்த்தது கிடையாது. அதிக சிக்சர் அடித்து உலக சாதனை படைத்தது எனக்கு புதுமையான அனுபவமாக இருந்தது. இந்த ஆட்டம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 4 வருடங்களாக நான் சிறப்பாக விளையாடி வருகிறேன். ஆனாலும் 50 அல்லது 60 பந்துகளில் சதம் அடித்தது கிடையாது. இந்த திறமை எனக்குள் எங்கோ முடங்கி கிடந்து இருக்கிறது. அதில் இருந்து சிறிது வெளிப்பட்டு இருப்பதாக நான் நினைக்கிறேன். ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தது. தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்தனர். ஒட்டுமொத்தத்தில் எங்களுக்கு இது ஒரு நல்ல நாள். இது என்னுடைய நாளாக அமையும் என்று நான் நினைக்கவில்லை. எங்கள் அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு இணையாக நான் ஆடியது அற்புதமானது. ஆப்கானிஸ்தான் அணி வீரர்களிடம் நல்ல திறமை உள்ளது. அவர்களது சுழற்பந்து வீச்சு சிறப்பாக இருந்தது’ என்று தெரிவித்தார்.


Next Story