கைவிரலில் காயமடைந்த இந்திய வீரர் தவான் உலக கோப்பை போட்டியில் இருந்து விலகல் ரிஷாப் பான்ட் சேர்ப்பு


கைவிரலில் காயமடைந்த இந்திய வீரர் தவான் உலக கோப்பை போட்டியில் இருந்து விலகல் ரிஷாப் பான்ட் சேர்ப்பு
x
தினத்தந்தி 19 Jun 2019 10:30 PM GMT (Updated: 19 Jun 2019 9:59 PM GMT)

கைவிரலில் காயமடைந்த இந்திய வீரர் ஷிகர் தவான் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ரிஷாப் பான்ட் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

சவுதம்டன், 

கைவிரலில் காயமடைந்த இந்திய வீரர் ஷிகர் தவான் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ரிஷாப் பான்ட் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

தவான் காயம்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 2 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 8 ரன் எடுத்த ஷிகர் தவான், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 9–ந்தேதி லண்டன் ஓவலில் நடந்த அடுத்த ஆட்டத்தில் 117 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார். ஆனால் இந்த ஆட்டத்தின் போது கம்மின்ஸ் வீசிய ஒரு பவுன்சர் பந்து அவரது இடது கையை பதம் பார்த்தது. வலியை பொறுத்து கொண்டு தொடர்ந்து விளையாடி சதம் அடித்தார்.

‘ஸ்கேன்’ பரிசோதனையில் அவரது இடது கை பெருவிரலில் சிறிய அளவில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அணியின் முக்கியமான சீனியர் வீரர் என்பதால் காயத்தை காரணம் காட்டி அவரை உடனடியாக கழற்றி விட அணி நிர்வாகம் விரும்பவில்லை. அவரால் 3 ஆட்டங்களில் விளையாட முடியாது என்று மட்டும் தெரிவிக்கப்பட்டது.

வாய்ப்பில்லை

இந்த நிலையில் தவானின் காயத்தன்மை குறித்து துல்லியமாக அறிய சில மருத்துவ நிபுணர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் அவரது காயம் குறிப்பிட்ட காலத்திற்குள் குணமடைய வாய்ப்பில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நேற்று விலகினார்.

இந்திய அணியின் நிர்வாக மேலாளர் சுனில் சுப்பிரமணியம் கூறுகையில், ‘சில டாக்டர்களிடம் ஆலோசித்த போது தவானின் விரலை சுற்றி போடப்பட்டுள்ள கட்டுவை ஜூலை மாதம் 2–வது வாரம் வரை பிரிக்க முடியாது என்று தெரிவித்தனர். இதனால் உலககோப்பை கிரிக்கெட்டில் எஞ்சிய போட்டிகளில் அவரால் பங்கேற்க இயலாது’ என்றார். 33 வயதான ஷிகர் தவான் பொதுவாக இங்கிலாந்து மண்ணில் நடக்கும் ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடக்கூடியவர். அவரது விலகல் இந்திய அணிக்கு நிச்சயம் பின்னடைவு தான் என்பதில் சந்தேகமில்லை.

ரிஷாப் பான்டுவுக்கு வாய்ப்பு

தவானுக்கு பதிலாக விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான 21 வயதான ரிஷாப் பான்ட் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது சேர்க்கைக்கு ஒப்புதல் அளிக்கும்படி ஐ.சி.சி.யின் தொழில்நுட்ப கமிட்டியிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்டில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சிறப்புக்குரிய ரிஷாப் பான்ட் கடந்த மாதம் நிறைவடைந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக 16 ஆட்டங்களில் ஆடி 27 சிக்சர் உள்பட 488 ரன்கள் குவித்தது நினைவு கூரத்தக்கது. ரிஷாப் பான்ட் ஏற்கனவே இங்கிலாந்துக்கு சென்று விட்ட போதிலும் சவுதம்டனில் நாளை மறுதினம் நடக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது.


Next Story