இந்திய அணியிடம் தோற்றதால் தற்கொலை செய்ய நினைத்தேன் - பாகிஸ்தான் பயிற்சியாளர் ஆர்தர் தகவல்


இந்திய அணியிடம் தோற்றதால் தற்கொலை செய்ய நினைத்தேன் - பாகிஸ்தான் பயிற்சியாளர் ஆர்தர் தகவல்
x
தினத்தந்தி 25 Jun 2019 11:24 PM GMT (Updated: 25 Jun 2019 11:24 PM GMT)

இந்திய அணியிடம் தோற்றதால் தற்கொலை செய்ய நினைத்ததாக, பாகிஸ்தான் பயிற்சியாளர் ஆர்தர் தெரிவித்தார்.

லண்டன்,

உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தோற்றதும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக மிக்கி ஆர்தர் (தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்) கூறியதாவது:-

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோற்ற பிறகு எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அன்றைய தினம் இரவு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட மனதில் தோன்றியது. அந்த அளவுக்கு நெருக்கடி இருந்தது. அதன் பிறகு, ‘ஒரு போட்டியில் தோற்கலாம், அடுத்த ஆட்டத்தில் ஜெயித்து சரிவில் இருந்து மீளலாம்’ என்று என்னை நானே தேற்றிக்கொண்டு அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.

பாகிஸ்தான் வீரர்களும், ஊடகத்தினர், ரசிகர்கள், சமூக வலைதளங்களின் விமர்சனங்களால் மிகவும் வேதனைக்குள்ளானார்கள். இது உலக கோப்பை போட்டி. ஊடகத்தினர் அலசல், ரசிகர்களின் எதிர்பார்ப்பு எல்லாம் இருக்கிறது. இவற்றை சமாளிக்க வேண்டும். ‘ஒரே ஒரு சிறந்த ஆட்டம் எல்லாவற்றையும் மாற்றும். அதை இன்று செய்யப்போவது யார்?’ என்று ஒவ்வொரு முறையும் வீரர்களிடம் நான் சொல்வது உண்டு. நாங்கள் அடுத்து நியூசிலாந்து அணியுடன் மோத உள்ளோம். நியூசிலாந்தை எங்களால் வீழ்த்த முடியும். எங்களது முழு திறமையை வெளிப்படுத்தினால் உலகின் எந்த அணியையும் சாய்க்க முடியும். இவ்வாறு ஆர்தர் கூறினார்.

கடந்த 16-ந்தேதி மான்செஸ்டரில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் துவம்சம் செய்தது. உலக கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணி ஒரு போதும் இந்தியாவை வென்றதில்லை. மோதிய 7 முறையும் தோற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story