கடைசி இரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு தகுதி பெறுவோம் - இங்கிலாந்து கேப்டன் மோர்கன்


கடைசி இரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு தகுதி பெறுவோம் - இங்கிலாந்து கேப்டன் மோர்கன்
x

கடைசி இரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு தகுதி பெறுவோம் என இங்கிலாந்து கேப்டன் மோர்கன் தெரிவித்தார்.

லண்டன்,

உலக கோப்பை கிரிக்கெட்டில் லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து முதல் அணியாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. அதே சமயம் 3-வது தோல்வியை சந்தித்த இங்கிலாந்து அணி எஞ்சிய 2 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அரைஇறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது. தோல்விக்கு பிறகு இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் கூறியதாவது:-

இந்த தோல்வி எங்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது. ஆனாலும் எங்களுக்கு அரைஇறுதி வாய்ப்பு பறிபோய்விடவில்லை. எங்கள் தலைவிதி எங்கள் கையில் தான் உள்ளது. எஞ்சிய இரு லீக் ஆட்டங்களிலும் நாங்கள் வெற்றி பெற்று நிச்சயம் அரைஇறுதிக்கு தகுதி பெறுவோம். இந்த போட்டி தொடரின் தொடக்கத்தில் இருந்த நம்பிக்கை தற்போது இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். எங்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டியது அவசியமானதாகும். இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி இரு லீக் ஆட்டங்களும் சவாலாக இருக்கும். நாங்கள் எங்களது பலத்தில் மீண்டும் கவனம் செலுத்த வேண்டும். பேட்டிங்கில் ஆக்ரோஷமாக செயல்படுவது தான் எங்களது பலமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story