இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம்: இந்திய அணியின் 4-வது வரிசை வீரராக ரிஷாப் பண்ட் - ரோகித் சர்மா கருத்து


இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம்: இந்திய அணியின் 4-வது வரிசை வீரராக ரிஷாப் பண்ட் - ரோகித் சர்மா கருத்து
x
தினத்தந்தி 1 July 2019 10:15 PM GMT (Updated: 1 July 2019 9:38 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் 4-வது வரிசை வீரராக ரிஷாப் பண்ட் களம் இறக்கப்பட்டது குறித்து ரோகித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.


* உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்திடம் கண்ட தோல்வி குறித்து காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி தனது டுவிட்டர் பதிவில், ‘இந்த உலக கோப்பை போட்டி தொடரில் இந்திய அணியின் வெற்றிப்பயணம் முடிவுக்கு வர புதிய சீருடை (ஆரஞ்சு நிறம்) தான் காரணம்’ என்று விமர்சித்து உள்ளார்.

* இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் 4-வது வரிசை வீரராக ரிஷாப் பண்ட் களம் இறக்கப்பட்டது குறித்து இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேட்ட போது, ‘நீங்கள் எல்லோரும் ரிஷாப் பண்ட் விளையாட வேண்டும் என்று தானே நினைத்தீர்கள். நீங்கள் எல்ல்லோரும் ரிஷாப் பண்ட் எங்கே? எங்கே? என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டு இருந்தீர்கள். இதோ 4-வது வீரராக ரிஷாப் பண்ட் என்று சிரித்தபடி பதில் அளித்தார். அவர் மேலும் கூறுகையில், ‘ரிஷாப் பண்ட்க்கு இது தான் உலக கோப்பையில் முதல் ஆட்டமாகும். அவர் இன்னும் சற்று நம்பிக்கை பெற வேண்டியது அவசியமானதாகும். அவரிடம் இருந்து நிறைய எதிர்பார்ப்பது சரியானது கிடையாது. அவர் தனது ஆட்டத்தை அனுபவித்து விளையாடட்டும். அப்போது எல்லாம் நன்றாக அமையும். ரிஷாப் பண்டை 4-வது வீரராக களம் இறக்கியது சரியானது தான். சாஹல், குல்தீப் பந்து வீச வருகையில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நல்ல தொடக்கம் கண்டு இருந்தனர். அவர்கள் இருவரது பந்து வீச்சையும் குறி வைத்து அடித்தனர். அவர்கள் இருவருக்கும் இது மோசமான நாளாகும். இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டது. அவர்கள் வெற்றிக்கு தகுதியான அணி தான்’ என்றார்.

* இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் அளித்த ஒரு பேட்டியில், ‘இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் சாஹல், குல்தீப்புக்கு மோசமான நாளாக நான் கருதுகிறேன். அவர்கள் இருவரும் இணைந்து சரியாக பந்து வீசவில்லை என்றால் அது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்த்துகிறது. இந்திய அணி சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராவது எல்லா ஆட்டங்களிலும் சிறப்பாக செயல்பட வேண்டும்’ என்று தெரிவித்தார்.


Next Story