இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகித்தது - இந்திய கேப்டன் விராட்கோலி


இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகித்தது - இந்திய கேப்டன் விராட்கோலி
x
தினத்தந்தி 1 July 2019 11:15 PM GMT (Updated: 1 July 2019 10:20 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகித்தது என்று இந்திய அணி கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.

பர்மிங்காம்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் பர்மிங்காமில் நேற்று முன்தினம் நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் குவித்தது.

பின்னர் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 306 ரன்களே எடுத்து முதல் தோல்வியை சந்தித்தது. ரோகித் சர்மா சதம் வீணானது. 111 ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ ஆட்டநாயகன் விருது பெற்றார்.

மோர்கன் மகிழ்ச்சி

வெற்றிக்கு பிறகு இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் அளித்த பேட்டியில், ‘நாங்கள் நம்ப முடியாத அளவுக்கு நல்ல தொடக்கம் கண்டோம். டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது எளிதான முடிவல்ல. ஆனால் பின்னர் அது மிகச்சிறந்த முடிவாக அமைந்தது. நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜாசன் ராய், பேர்ஸ்டோ இணை நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். 10 முதல் 20 ஓவர்களில் நாங்கள் 95 ரன்கள் சேர்த்தது கணிசமானதாகும். இந்தியாவின் இரண்டு பிரதான சுழற்பந்து வீச்சாளர்களை எங்கள் அணியினர் சிறப்பாக எதிர்கொண்டனர். எங்கள் அணியினர் சிறப்பாக பந்து வீசினார்கள். குறிப்பாக பிளங்கெட் பந்து வீச்சு அருமையாக இருந்தது. மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்தி அவர் முக்கிய பங்களித்தார். இந்த உலக கோப்பை போட்டியில் எந்த ஆட்டமும் எளிதாக இல்லை. இந்த உலக கோப்பை போட்டியில் எல்லா ஆட்டங்களும் மிகவும் கடினமாக இருந்தது’ என்று தெரிவித்தார்.

விராட்கோலி விளக்கம்

தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி கருத்து தெரிவிக்கையில், ‘இங்கிலாந்து அணி ஆடிய விதத்தை பார்க்கையில் ஒரு கட்டத்தில் அந்த அணி 360 ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்த்தேன். அவர்களை 337 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது மகிழ்ச்சி அளித்தது. இன்னும் 10 முதல் 15 ரன்கள் குறைவாக கட்டுப்படுத்தி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடினார். ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்ததாலும், ஒரு பகுதியில் பவுண்டரியின் அளவு குறைவாக இருந்ததாலும் சுழற்பந்து வீச்சாளர்களால் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த ஆட்டத்தில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகித்தது. நாங்கள் பேட்டிங்கில் நன்றாக தான் செயல்பட்டோம். முக்கியமான கட்டத்தில் நாங்கள் விக்கெட்டை இழக்காமல் இருந்து இருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறு மாதிரி இருந்து இருக்கலாம். ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா களத்தில் இருக்கும் வரை எங்களுக்கு வெற்றி வாய்ப்பு நன்றாகவே இருந்தது. விக்கெட் சீரான இடைவெளியில் விழுந்தால் பெரிய இலக்கை சேசிங் செய்வது கடினமானதாகும். எல்லா புகழும் இங்கிலாந்து அணியையே சாரும். அவர்கள் இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினார்கள். கடைசி கட்டத்தில் டோனி பவுண்டரி அடிக்க கடுமையாக முயற்சித்தார். ஆனால் அந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இங்கிலாந்து அணியினர் நேர்த்தியாக பந்து வீசினர். அவர்கள் மெதுவாகவும் பந்து வீசியதால் அதனை சரியாக கணித்து அடித்து ஆடுவது கடினமாக இருந்தது. எல்லா அணிகளும் தோல்வியை சந்தித்து இருக்கின்றன. இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்று முன்னேற்றம் காண வேண்டும். இன்னும் சற்று துணிந்து ஆடி இருந்தால் வெற்றியை நெருங்கி இருக்கலாம்’ என்றார்.


Next Story