உலக கோப்பையில் லீக் சுற்றில் வெளியேற்றம்: வங்காளதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளர் நீக்கம்


உலக கோப்பையில் லீக் சுற்றில் வெளியேற்றம்: வங்காளதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளர் நீக்கம்
x
தினத்தந்தி 9 July 2019 10:00 PM GMT (Updated: 9 July 2019 8:20 PM GMT)

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் 10 அணிகள் கலந்து கொண்டன.

டாக்கா, 

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் 10 அணிகள் கலந்து கொண்டன. இதில் வங்காளதேச அணி லீக் சுற்றில் 9 போட்டிகளில் 3 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 7 புள்ளிகள் பெற்று 8–வது இடத்தை பெற்றது. இதனால் வங்காளதேச அணி லீக் சுற்றுடன் வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில் வங்காளதேச கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஸ்டீவ் ரோட்ஸ்சை (இங்கிலாந்து) வங்காளதேச கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கம் செய்துள்ளது. இது குறித்து வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி நிஜாமுதீன் சவுத்ரி கருத்து தெரிவிக்கையில், ‘ஒப்பந்த காலம் வரை பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸ்சை நீட்டிக்க நாங்கள் விரும்பவில்லை. நீக்க முடிவு செய்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர் கவுரவமாக விலகி கொள்ள சம்மதம் தெரிவித்தார். இந்த மாதம் இறுதியில் நடைபெறும் இலங்கை பயணத்துக்கான வங்காளதேச கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார்? என்பதை இன்னும் முடிவு செய்யப்படவில்லை’ என்று தெரிவித்தார். இதேபோல் வங்காளதேச அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் கார்ட்னி வால்ஷ் (வெஸ்ட்இண்டீஸ்), சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் சுனில் ஜோஷி (இந்தியா) ஆகியோரின் ஒப்பந்தமும் நீட்டிக்கப்படவில்லை.


Next Story